அடுக்குமாடி கட்டிடத்தின் அவல நிலை.. சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார் திமுக எம்எல்ஏ
சென்னை: சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கட்டிடத்தின் சுவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளது. உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன என்று பல்வேறு செய்தி சேனல்களில் வீடியோக்கள் வெளியாகின.

மோசமான நிலையில் கட்டிடம்
இது மட்டுமின்றி கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து மோசமான நிலையில் இருப்பது பற்றி செய்தி வெளியானது. இந்த கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கட்டிடத்தின் அவல நிலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்திருந்தார் 2016-ல் அதிமுக ஆட்சியில் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 864 வீடுகள் இருக்கின்றன.

சோதனை செய்ய திட்டம்
குடியிருப்பு கட்டிடத்தின் தரத்தை சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு குழுவினரின் ஆய்வறிக்கையை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குடியிருப்பு கட்டிடத்தை குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடும் நடவடிக்கை
இது தொடர்பாக குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், '' சென்னை ஐஐடி இந்த கட்டுமானம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. நிபுணர் குழு அறிக்கை கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் சரிசெய்யப்படும். ஒப்பந்ததாரரோ, அதிகாரிகளோ யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சிதிலமடைந்ததை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பு முறைகேடு தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரமற்று இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications