திமுக கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு எத்தனை சீட்? எந்தெந்த தொகுதிகள்?
சென்னை: திமுக கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 3 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டன. அதிமுக தலைமையில் சிறிய கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைக்க ஒரு பக்கம் காய் நகர்த்தி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிக்களுக்கு ஸ்டாலின் எத்தனை இடங்கள் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் பிரதான இடம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுச்சேரி என சேர்த்து 11 இடங்கள் கொடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்போ இந்தமுறை 15 சீட்களை திமுகவிடம் கேட்டு வாங்கிவிட வேண்டும் என உறுதியாக உள்ளது. திமுக வட்டாரத்தில் விசாரித்த வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 15 சீட்கள் கொடுக்க வாய்ப்பே இல்லை என்றும் 11 சீட்கள் தான் திமுக நிர்ணயித்துள்ள அளவுகோல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மாவட்டத்திற்கு மாவட்டம் ஊருக்கு ஊர், நிலவும் கோஷ்டிப்பூசல், வேட்பாளர் விவகாரம், உள்ளிட்ட காரணங்களை மைனஸ் பாயிண்டாக திமுக தரப்பு முன் வைக்கிறது. தற்போதைய நிலவரப்படி எந்தெந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என்பது பற்றி திமுக தலைமை முடிவு எடுக்கவில்லை என்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலினும், கூட்டணி இட பங்கீட்டில் முக்கிய இடம் வகித்து வரும் நேருவும் மழை வெள்ளம் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதால் ஜனவரி மாதம் கடைசியில் தான் இந்த விவகாரத்தில் இறுதி முடிவுகள் எடுக்கபடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகள் வெற்றிபெற்றன. தமிழ்நாடு, புதுச்சேரி என சேர்த்து மொத்தமாக 10 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை அதிகபட்சம் தமிழ்நாட்டில் கூடுதலாக 1 தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னணி தலைவர்களோ திமுகவிடம் 15 தொகுதிகளை வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதோடு அது தொடர்பாக கே.சி.வேணுகோபாலுக்கும் கடிதங்களை அனுப்பி வருகிறார்களாம்.
இதனிடையே சிட்டிங் காங்கிரஸ் எம்.பி.க்கள் யாரும் தங்கள் தொகுதியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ரவுண்டு வர வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அவர்களில் செயல்படாத எம்.பி.க்களின் பட்டியலை திமுக தலைமை பக்காவாக தயார் செய்து வைத்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் சேதாரம் இந்தியா கூட்டணிக்கு தான் என்பதை காங்கிரஸ் தேசிய தலைமையிடமே திமுக விளக்கிக் கூற தயாராக உள்ளதாம்.












Click it and Unblock the Notifications