ஆள் மாறாட்டம் மோசடிக்கு வழிவகுக்கும் face app... விளையாட்டு விபரீதமாக அதிக வாய்ப்பு
சென்னை: சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் பேஸ் ஆப் செயலி ஆள்மாறாட்ட மோசடிக்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றக் கூடிய இந்த செயலியால் எதிர்காலத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், யாரும் யாருடைய படத்தையும் இந்த பேஸ் ஆப் செயலி மூலம் நினைத்தபடி மாற்ற முடியும் என்பதால் இதனை முழுமையாக தடை செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

face app
பேஸ் ஆப் செயலியை கடந்த 2017-ம் ஆண்டு ரஷ்ய நிறுவனம் வெளியிட்டது. தொடக்கத்தில் இதற்கு பெரியளவில் வரவேற்பு இல்லாததால் அதில் கூடுதலாக பல்வேறு வசதிகளை இணைத்து செயலியை புதுப்பித்து மேம்படுத்தியது. இதையடுத்து கடந்த ஆண்டு 2019-ல் இந்தியாவில் பெரியளவில் வரவேற்பு கிடைத்ததுடன் பேஸ் ஆப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட சலிப்பு காரணமாக மெல்ல அது ஓரங்கட்டப்பட்ட நிலையில், இப்போது லாக்டவுன் எதிரொலியாக பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து மீண்டும் பேஸ் ஆப் டிரெண்டாகி வருகிறது.

பெண்கள்
பேஸ் ஆப் செயலியில் உள்ள வசதியை பயன்படுத்தி ஆணாக இருப்பவரை பெண்ணாகவும், பெண்ணாக இருப்பவரை ஆணாகவும் அச்சு அசலாக மாற்ற முடியும். மேலும், இளமையான தோற்றத்தில் உள்ள ஒரு புகைப்படத்தை வயதான தோற்றம் உடைய புகைப்படமாகவும், குழந்தை வயது புகைப்படமாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இதனால் இந்த செயலியை இளைஞர்களும், இளம்பெண்களும் விளையாட்டாக பயன்படுத்தி தங்கள் பேஸ் ஆப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரிமாறி வருகின்றனர்.

விபரீதமாகும்
இந்த பேஸ் ஆப் செயலி மூலம் ஆணாக இருப்பவர் தனது படத்தை பெண்ணாகவும், பெண்ணாக இருப்பவர் தனது படத்தை ஆணாகவும் மாற்றி திருமண மேட்ரிமோனியல் தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் முகப்பு படங்களாக பயன்படுத்தி மோசடியான காரியங்களில் ஈடுபடலாம். மேலும், பண மோசடி, வேலைவாய்ப்பு மோசடி என பல்வேறு வகைகளில் ஆள்மாறாட்டம் செய்யவும் மிக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் இந்த விவகாரத்தை விளையாட்டாக எண்ணாமல் விபரீதம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டிக் டாக்
ஏற்கனவே சீன நிறுவனத்தின் தயாரிப்பான டிக் டாக் செயலியால் பலரது வாழ்க்கை சீரழிந்து வரும் நிலையில் இப்போது புதிதாக அந்த வரிசையில் இணைய காத்திருக்கிறது பேஸ் ஆப் செயலி. பேஸ் ஆப் மூலம் 10 % நன்மை கிடைக்கிறது என்றால் 90 % தீமை நிகழவே அதிக வாய்ப்புண்டு. ஆகையால் இந்த விவகாரத்தில் காவல்துறையும், அரசும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே ஆள்மாறாட்ட மோசடியை தடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications