வளசரவாக்கத்தில் பிரபல இதய நோய் டாக்டர் தந்த ஷாக்! கழுத்தில் என்ன? யாரந்த சென்னை பெண்? உடைந்த பின்னணி
சென்னை: பிரபல இதயநோய் மருத்துவர் உல்லாஸ் சென்னையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மாரடைப்பு என்று நாடகமாடி உண்மையை மறைக்க முயன்ற மனைவியின் வாக்குமூலத்தால், இந்த அதிர்ச்சிகரமான மரணத்தின் பின்னணியில் இருந்த பாலியல் புகார் விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். என்னதான் நடந்தது வளரசவாக்கத்தில்?
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரபல மருத்துவர் உல்லாஸ். இவருக்கு 60 வயதாகிறது.. ஆழ்வார் திருநகர் வீரப்பா நகரில் வசித்து வந்த இவர், முகப்பேரில் உள்ள புகழ்பெற்ற மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இதய மின் உடலியல் மற்றும் இதயத் துடிப்பு சீரமைப்பு துறையின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

பிரபல இதய நோய் டாக்டர்
நீண்ட அனுபவம் வாய்ந்த நிபுணராகவும், மருத்துவ உலகில் மரியாதைக்குரிய ஒருவராக அறியப்பட்டவர் உல்லாஸ்.. இந்நிலையில், நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. டாக்டர் இப்படி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சக மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரமான நிகழ்வின் பின்னணியில் பல பகீர் தகவல்களும் வெளியாகியுள்ளன. டாக்டர் உல்லாஸின் மனைவி மோனா, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
சென்னை வளசரவாக்கம்
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த உல்லாஸ், நேற்று தனது படுக்கையறையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். வீட்டில் இருந்த பணியாளர்கள் உடனடியாக அவரது மனைவியிடம் தகவல் தெரிவிக்க, அவர் ஆம்புலன்ஸ் மூலம் கணவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
மாரடைப்பால் உல்லாஸ் இறந்துவிட்டதாகவே இது கருதப்பட்டது. ஆனால் உல்லாஸின் கழுத்தில் இருந்த காயங்களைக் கண்ட மருத்துவர்கள், சந்தேகம் அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, உல்லாஸின் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்..
உளறிய கார் டிரைவர்
அந்த விசாரணையின்போது, தங்கள் குடும்ப கார் டிரைவர் சதீஷின் உதவியுடன் உண்மையை மறைத்து, மாரடைப்பு என்று சொன்னதை அவர் ஒப்புக்கொண்டார். உண்மையைச் சொல்ல அச்சப்பட்டதாகவும், கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை மறைக்க முயன்றதாகவும் அவர் போலீசில் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
இதையடுத்து இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்ற விசாரணையையும் போலீசார் முன்னெடுத்தனர்.. அப்போதுதான் கடந்த 2024-ஆம் ஆண்டு டாக்டர் உல்லாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
கழுத்தில் காயம் - பாலியல் புகார்
அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் இருந்த பெண் தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர், உல்லாஸ் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகத் திருமங்கலம் மகளிர் ஸ்டேஷ்னில் புகார் தந்திருக்கிறாராம்.. அந்த புகாரின் அடிப்படையில், கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி திருப்பதியில் உல்லாஸை போலீசார் கைது செய்துள்ளனர்..
கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றக் காவலுக்குப் பின் 15 நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மகிளா நீதிமன்றத்தில் இப்போதும் நடைபெற்று வருகிறது. இந்த சட்டப்போராட்டத்தினால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலும், அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுகளும் தான், அவர் இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பின்னணி என்ன
தன்னுடைய கவுரவத்துக்கும், நீண்ட கால மருத்துவப் பணிக்கும் ஏற்பட்ட இந்த களங்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமலே உல்லாஸ் தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது..
சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஒருவர், பாலியல் புகார் மற்றும் சட்டச் சிக்கல்களால் மனமுடைந்து உயிரிழந்த இந்தச் சம்பவம், சென்னை மருத்துவத்துறையில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. சென்னை வளசரவாக்கம் போலீசார் இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...!!!












Click it and Unblock the Notifications