கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அட்டை பெட்டியில் கொடுத்த சிசு சடலம்.. நடந்தது என்ன? தந்தை விளக்கம்!
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்துவிட்டு இறந்த குழந்தையை அடக்கம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் ரூ 2500 கேட்டார்களா என்பது குறித்து குழந்தையின் தந்தை மசூத் விளக்கமளித்துள்ளார்.
புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மசூத். இவருடைய மனைவி சவுமியா. இவர் இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தார். இந்த நிலையில் இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் மனைவி சவுமியாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் மசூத் தவித்தார். இந்த நிலையில் சவுமியாவுக்கு பெண் குழந்தை வீட்டிலேயே பிறந்தது. இதையடுத்து தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் இருந்தது.
இதையடுத்து தாயையும் சேயையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு மசூத் போன் செய்தும் எந்த பதிலும் வராததால் வேறு வழியின்றி சவுமியாவையும் பிறந்த குழந்தையையும் மீன்பாடி வண்டியில் ஏற்றிக் கொண்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது என தெரிவித்தனர். இதையடுத்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த மசூத், குழந்தையை எடுத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சென்றார். அங்கு 4 நாட்களாக தொடர்ந்து குழந்தை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த குழந்தையை துணியில் சுற்றிக் கொடுக்காமல் ஒரு அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மசூத் கூறியிருப்பதாவது: 6 ஆம் தேதி என் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்தது. குழந்தையின் தொப்புக் கொடி கூட எங்களால் துண்டிக்க முடியவில்லை.
இதையடுத்து தாய்க்கு ஜன்னி வந்துவிடும் என சொன்னதால் நான் அவரையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வண்டி தேடினேன். இதையடுத்து மீன்பாடி வண்டியில் ஏற்றி அழைத்து சென்றேன். நேராக ஜி 3 மருத்துவமனைக்கு சென்றேன், பிறகு முத்து என்ற தனியார் மருத்துவமனைக்கு போனேன்.
அங்கு குழந்தையை சுத்தம் செய்து கொடுத்தார்கள். பிறகு தாயின் வயிற்றை சுத்தம் செய்ய எழும்பூர் மருத்துவமனைக்கு போக சொன்னார்கள். படகு மூலம் எங்களை அனுப்பினார்கள். அங்கிருந்து கேஎம்சி மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் வந்தோம். குழந்தையை பிணவறையில் கொடுத்துவிடுங்கள் என கூறி அட்டை பெட்டியில் போட்டுக் கொடுத்தார்கள்.
காலையில் ஆதார் கார்டுடன் வரச் சொன்னார்கள். நான் வந்தேன் , பின்னர் போலீஸ் சர்டிபிகேட் கேட்டார்கள். அதை வாங்கிக் கொடுத்தவுடன் நான் எப்படி டப்பாவில் கொடுத்தேனோ அதே போல் கொடுத்துவிட்டார்கள் என்றார். குழந்தையை அடக்கம் செய்யரூ 2500 ஐ மருத்துவமனை ஊழியர்கள் யாரும் கேட்கவில்லை. அங்கு குடித்துவிட்டு பேசிய ஒருநபர் என்னிடம் ரூ 2500 கேட்டார் , பணம் கொடுத்தால் அடக்கம் செய்துவிடுவதாக சொன்னார். அவரை நான் மருத்துவமனையின் ஊழியர் என நினைத்துவிட்டேன். இவ்வாறு தந்தை மசூத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications