மனசு மாறும் எடப்பாடி.. கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறாரே.. ஓ பன்னீர்செல்வத்திற்கு பறந்த கடைசி ஆஃபர்
சென்னை: ஓ பன்னீர்செல்வம் விவகாரத்தில்.. டெல்லி அழுத்தம் காரணமாக எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் கொஞ்சமாக மனமிறங்கி வர தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்போ, ஓபிஎஸ்-ஸை நேரடியாகத் தங்களுக்குள் இழுப்பதை விட, தினகரன் தலைமையிலான ஒரு குடையின் கீழ் அவர் வருவதை ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, தனது முன்னாள் அரசியல் எதிரியான ஓ. பன்னீர்செல்வத்தை (ஓபிஎஸ்) மீண்டும் கட்சிக்குள் அல்லது கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தனது பிடிவாதமான போக்கை மெல்ல மெல்ல தளர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

தினகரன் வழியில் ஓபிஎஸ்: பாஜக-வின் வியூகம்
நேரடியாக ஓபிஎஸ்-ஸை அதிமுக-வில் சேர்ப்பதை விட, ஒரு தேர்தல் தந்திரமாக அவரை அமமுக (AMMK) சின்னத்தில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளை பாஜக முன்னெடுத்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு முக்கிய தூதுவராகச் செயல்பட்டு வருகிறார்.
தொடக்கத்தில், ஓபிஎஸ்-ஸை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்து, 'தாமரை' சின்னத்தில் போட்டியிட பாஜக அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், தனது சொந்தத் தொகுதியான போடிநாயக்கனூரில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் மண்டல ரீதியான வாக்கு வங்கி பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தாமரை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
குக்கர் சின்னத்தில் ஓபிஎஸ்?
தாமரைச் சின்னம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது டிடிவி தினகரனின் "குக்கர்" சின்னத்தின் கீழ் ஓபிஎஸ் தரப்பை அணிதிரட்டும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்போ, ஓபிஎஸ்-ஸை நேரடியாகத் தங்களுக்குள் இழுப்பதை விட, தினகரன் தலைமையிலான ஒரு குடையின் கீழ் அவர் வருவதை ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் பிளவுபட்டுள்ள முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என்பது இபிஎஸ்-ஸின் கணக்காக உள்ளது.
இறுதி முடிவு ஓபிஎஸ் கையில்!
இந்தத் தேர்தல் உடன்படிக்கை குறித்த முன்மொழிவுகள் ஓபிஎஸ் முன்னால் வைக்கப்பட்டுள்ளன. அரசியலில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது ஆதரவாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யவும் இந்த "அமமுக வழி" தீர்வை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வாரா என்பதே தற்போதைய கேள்வி. ஏனென்றால் ஓ பன்னீர்செல்வம் விஜய் பக்கம் செல்ல பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் விஜய் அவ்வளவு பிடி கொடுக்கவில்லை. அவர் ஓ பன்னீர்செல்வத்தை பெரிதாக மதிக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது.
45 ஆண்டுகால அரசியல் பாரம்பரியம் கொண்ட ஓபிஎஸ், தனது அரசியல் கௌரவத்தைச் சமரசம் செய்யாமல் இந்த கூட்டணியில் இணைவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதில் ஓ பன்னீர்செல்வம் முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நகர்வு வெற்றி பெற்றால், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு மெகா கூட்டணியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications