சாலை ஓரம் கல்லை நட்டு பூஜை.. மூடநம்பிக்கை எப்படியெல்லாம் இருக்குனு பாருங்க.. உயர்நீதிமன்றம் கவலை
சென்னை: சாலை ஓரம் கல்லை நட்டு துணியை போர்த்தி, பூஜைகள் செய்து சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள கல்லை அகற்ற தாசில்தாரருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து புகார் அளித்த போது, இது உரிமையியல் பிரச்னை என காவல் துறையினர் புகாரை முடித்து விட்டதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “சாலையில் ஒரு கல்லை நாட்டி, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுகிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.
சாலையில் நடப்பட்ட கல், சிலையா? இல்லையா? என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது எனத் தெரிவித்த நீதிபதி, இதற்காக வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என குறிப்பிட்டு, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுபோன்ற கற்சிலைகள் பெரும்பாலும் சிறு தெய்வ வழிப்பாட்டில்தான் காண முடிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications