பெரியார் சிலைக்கு மாலை.. கேஎன் நேரு மீது பாய்ந்த வழக்கு! 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளியானது உத்தரவு
சென்னை: அனுமதி பெறாமல் ஒன்று கூடி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஒன்றுகூடி, பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். இதுதொடர்பாக முன் அனுமதி பெறாமல் ஒன்று கூடி மாலை அணிவித்ததாக அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் திருச்சி கண்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அன்பில் பெரியசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஏற்கெனவே இதேபோன்ற மற்றொரு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்திருந்தார். அதாவது, திருச்சியில் கடந்த 2009-ம் ஆண்டு கட்டப்பட்ட 'கலைஞர் அறிவாலயம்' கட்டிடத்துக்காக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக சீனிவாசன் என்பவர், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்திருந்தார். அதையடுத்து கே.என்.நேருவுக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.என்.நேரு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தரப்பில், இந்த வழக்கில் இருதரப்பிலும் சமரசமாகி விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. அதேபோல,புகார்தாரர் தரப்பிலும் சமரச மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications