சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மனைவியை ஓட ஓட 25 இடங்களில் வெட்டிய கணவன்.. ஷாக் காரணம்
சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் நெருக்கமாக பைக்கில் போவதை பார்த்த கணவன், இறைச்சி வெட்டும் கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டினார். மனைவியை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி, 25 இடங்களில் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதாகும் ரஹமத்துல்லா, இவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சனாப் (24) என்பவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள காலணி தைக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன் ரஹமத்துல்லாவுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை இருக்கிறது. இதனிடையே கணவன்-மனைவி இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சனாப், கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த சூழலில் சண்டையில் இருந்தாலும், கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தார்களாம். இப்படியான சூழலில கடந்த 10 நாட்களாக கணவரிடம் பேச சனாப் மறுத்துவிட்டாராம். இதனால் சந்தேகம் அடைந்த ரஹமத்துல்லா, மனைவிக்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து எங்கு போகிறார்.. யாருடன் பேசுகிறார்...யாரையாவது காதலிக்கிறாரா என்று விசாரிக்க ஆரம்பித்தார்.
அப்போது சனாப்புக்கு வேறொரு வாலிபருடன் கள்ளக்காதல் இருப்பது ரஹமத்துல்லாவுக்கு தெரிய வந்துள்ளது. அந்த இளைஞருடன் சனாப், இருசக்கர வாகனத்தில் மிகவும் நெருக்கமாக அமர்ந்து செல்வதை பார்த்து ரஹமத்துல்லா கடும் கோபம் அடைந்தாராம்.
இதையடுத்து தனது மனைவி சனாப் வேலை பார்க்கும் கம்பெனிக்கு சென்று அவரிடம் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டாராம். மேலும் ரஹமத்துல்லா, தான் ஊருக்கு செல்கிறேன் வா என்று அழைத்துள்ளார். அதற்கு சனாப், "நீ இங்கே வரவேண்டாம். ஊரிலேயே தங்கி விடு" கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த ரஹமத்துல்லா, இடுப்பில் மறைத்து வைத்து இருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி சனாப்பை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பயங்கரமாக வெட்டியிருக்கிறார்.
இதில் சனாப் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டதால் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதுபற்றி அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து சென்று சனாப்பை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சனாப் உடலில் 25 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹமத்துல்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் மனைவியை 25 முறை கணவன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications