நிர்மலா சீதாராமன் சொல்வது கட்டுக்கதை! பற்றி எரியும் ஜல்லிக்கட்டு சர்ச்சை!
சென்னை: ஜல்லிக்கட்டைச் சனாதன தர்மத்துடன் இணைத்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குப் பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
திருவள்ளுவரை அடுத்து இப்போது ஜல்லிக்கட்டைக் கையில் எடுத்துள்ளது பாஜக. ஆளுநர் ரவி திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்தார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்படப் பலரும் கடுமையான எதிர்ப்பை பதியவைத்தனர்.

இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜல்லிக்கட்டைச் சனாதன தர்மத்தின் பண்டிகை என்றும் அதற்கு எதிராகப் பேசுபவர்கள் பிரிவினைவாதிகள் என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டார். அதனைத் தொடர்ந்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர், " ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள் !
சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் விழாவைப் பற்றி கலித்தொகை விரிவான குறிப்புகளைத் தருகிறது. முதலில் தெய்வ வழிபாடு செய்த பிறகே விழா தொடங்குகிறது. ஸ்டேடியத்தில் அல்ல.

"ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி,
'தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார்"
அதன்பின் ஜல்லிக்கட்டு அதிகமாகக் கொண்டாடப்படும் பாண்டிய நாட்டின் அரசன் போற்றப்படுகிறான்
"புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்"
பாடல் 104ல் காளைகளின் உருவங்களுக்கு நேரடியாகவே தெய்வங்களின் உவமை கூறப்படுகின்றன. பாடல் 105ல், தங்கள் நிறத்திற்கு மாறுபாடான ஒன்றை உடலில் கொண்டிருக்கும் காளைகளுக்கு உவமையாக தெய்வங்களின் பல அடையாளங்கள் சொல்லப்படுகின்றன. உதாரணமாக

"வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத் தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்"
கையில் சக்கரப் படையைத் தாங்கியவனும் கரிய உருக்கொண்டவனுமான திருமால் முழங்கும் சங்கம் போல அடையாளத்தை நெற்றியில் கொண்ட கருமை நிறக் காளை அங்கே வருகிறது. மேலும்
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்
வெள்ளை நிறத்தை உடையவனான பலராமன் மார்பில் அணியும் சிவந்த மாலைபோல சிவப்பு மறு கொண்ட வெள்ளைக் காளை அங்கே இருக்கிறது. பலராமனை ஒரு தோடு மட்டும் அணிந்தவன் என்று இங்கே புலவர் கூறுவதைக் கவனியுங்கள். இதற்கான குறிப்பு புராணங்களில் உள்ளது.

பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போலஇரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்
மழுவைத் தாங்கிய சிவபெருமானின் கழுத்தில் உள்ள நீலம் போல நீலமணிக் கழுத்தைக் கொண்ட குரால் காளையும் உள்ளது.
வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்பவாலிது கிளர்ந்த வெண் காற் சேயும்
முருகப் பெருமான் அணியும் வெள்ளை ஆடை போல உடல் முழுவதும் சிவப்பு நிறமாகவும் கால் மட்டும் வெள்ளை நிறமாகவும் உள்ள ஏறு ஒன்றும் அங்கே இருக்கிறது.
இப்படி காளைகளின் மாறுபட்ட நிறங்களிலும் நம் கடவுளர்களைக் கண்டனர் சங்க காலத் தமிழர்கள்" என்று ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவை ரீ ட்வீட் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், சிவன், முருகன் ஆகிய உருவங்கள் கலித்தொகையில் விரிவாக உள்ளன. அந்தக் காலத்து மக்களின் வாழ்க்கையின் அங்கமாக அவை இருந்தன.

அந்த சகாப்தத்தின் வாழ்க்கையை வேறுபட்டதாகக் கருதும் ஒவ்வொரு முயற்சியும் குறும்புத்தனமானது, தவறான நோக்கமும் பிரிவினைவாதமும் ஆகும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பலரும் எக்ஸ் தளத்தில் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர். 'ஒரு பண்பாட்டின் பயணம்' என்ற சிந்துவெளி நாகரிகம் பற்றிய புத்தகத்தை நிர்மலா சீதாராமன் படிக்க வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி ஒரு மறுப்பைப் போட்டுள்ளார். மேலும் அவர் மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்துள்ளார்.
ஆகவே, அவரிடம் நாம் பேசினோம். 'நம்மிடம் சங்க இலக்கியம் தொடங்கி, திருக்குறள் வரை பல சிறப்பான நூல்கள் உள்ளன. ஆனால், திருக்குறளுக்குப் பின் பெரிய அளவில் தமிழர்களின் படைப்புகள் வெளிப்படாமல் போனதற்கு ஆரியர்களின் வருகையே காரணம்.
அவர்கள் நம் இலக்கியங்களை எல்லாம் அவர்களின் கட்டுக்கதையைக் கலந்துவிட்டுவிட்டனர்" என்று ஆவேசமாக எடுத்த எடுப்பிலேயே பேசத் தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய கார்த்திகேய சிவசேனாதிபதி, "ஜல்லிக்கட்டு உரிமை மறுக்கப்படும் போது தமிழ்நாடு சட்டரீதியாகப் போராடி வென்றது. மக்களும் அதற்காகக் குரல் கொடுத்தனர். போராட்ட களத்தில் குதித்தனர்.
அன்றைக்குத் தமிழ்நாட்டிற்கு வந்த நிர்மலா சீதாராமன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு கருத்தையும் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசே அதற்குச் சட்டம் இயற்றலாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அதைப்போல் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இருந்து பொது விடுமுறையை மத்திய பாஜக அரசு நீக்கியது. இன்றைக்கு அக்கட்சியின் நிதியமைச்சர் ஜல்லிக்கட்டைச் சனாதனத்துடன் ஒப்பிட்டு உரிமைக் கொண்டாடுகிறார். அவர்களுக்கு என்று வரலாறு இல்லை. ஆகவே, அடுத்தவர்களின் வரலாற்றை தன்வயவைப்படுத்திக் கொள்வதைத்தான் காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். நிர்மலா சீதாராமன் சொல்வது கட்டுக்கதை.

சங்க காலம் என்பது தமிழ் வரலாற்றில் மிகப்பெரிய காலகட்டம். அதன் இறுதிக்கட்டத்தில் ஆரியர்களின் வருகை என்பது வந்துவிடுகிறது. அவர்களின் வருகையைக் கலித்தொகையில் நாம் பார்க்க முடிகிறது.
அப்போதுதான் மாயோன் என்ற பெயர் உள்ளே வருகிறது. முருகனுக்கு இந்திரன் மகளைக் கட்டி வைத்தோம் என்று ஒரு புதியதாகப் பெயரைக் கொண்டுவந்து சேர்த்தார்கள். இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
சிந்துவெளி நாகரிகம் சொல்கிறது ஜல்லிக்கட்டைப் பற்றி. 4 ஆயிரம் ஆண்டுகள் தமிழர்களின் அடையாளம் ஜல்லிக்கட்டு. 4 ஆயிரம் ஆண்டுகள் முன்னால் ஆரியர்கள் தமிழ்நாட்டிலிருந்தார்களா? அவர்கள் வருகைக்கு முன்பே ஏறுதழுவுதல் என்பது தமிழர் நாகரிகம்.
சிந்துவெளி நாகரிகம் என்பது 1970 களில்தான் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்த ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு. அப்போதே அவர்கள் இந்தக் கட்டுக்கதைகளைக் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றிச் சொல்கிறார்கள். அப்படி என்றால் வேதிக் லிட்ரேச்சரில் ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் ஏதேனும் உள்ளதா? ரிக் வேதத்தில் ஜல்லிக்கட்டு பற்றி ஏதேனும் குறிப்புகள் உள்ளதா? அதை இவர்களால் குறிப்பிட முடியுமா?
அதைப்போன்று தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சியில் இதுவரை இவர்கள் சொல்லும் கதைகளுக்கு ஏதேனும் சான்றுகள் கிடைத்துள்ளதா? இதுவரை வேதகாலம் தொடர்பாகவோ, சனாதன தர்மம் சார்ந்தோ சான்றுகள் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை. அதுதான் உண்மை.
விவசாயம் செய்வதையோ வர்த்தகம் செய்வதையோ கொண்டாடியது தமிழ்ச் சமுகம். ஆனால், ஆரிய வேதக் கலாச்சாரம் விவசாயம் செய்பவர்களைச் சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் பார்க்கிறது. சங்க இலக்கியம் வர்த்தகம் செய்தவர்களை, வேளாண் குடிகளை உயர்ந்த குடியாக முன்வைக்கிறது.
ஏர் கலப்பையை பிடிக்கும் யாரையும் அவர்கள் உயர்ந்த குலமாகக் குறிப்பிட்டதே இல்லை. உயர்வாக வைத்துப் பார்த்ததே இல்லை. அதன் அடிப்படையில்தான் விவசாய போராட்டம் செய்பவர்கள் மீது ட்ராக்டர் விட்டு ஏற்றினார்கள். துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். காவல்துறையை விட்டு அடித்தார்கள்.
ஆனால், திருக்குறளில் அல்லது தொல்காப்பியத்தில் அடுத்து சங்க இலக்கியத்தில் இப்படி மனிதர்களை உயர்வு தாழ்வு சொல்லி அழைக்கும் முறை அல்லது தத்துவம் உள்ளதா எனக் காட்டச் சொல்லுங்கள். இல்லையே? தமிழ்க் கலாச்சாரம் என்பது முற்றிலும் வேறானது.
அதைத்தான் அம்பேத்கர் சொன்னார். இந்தியா முழுமைக்கும் ஒரு தொடர்பு உள்ள சமூகம் என்றால் அது தமிழ்ச் சமுகம் என்றார். அப்படிப் பரந்துவிரிந்த சமூகத்தை ஒரு மாநிலத்திற்குள் இவர்கள் சுருக்கிவிட்டார்கள்" என்கிறார்
அவரைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்ட அய்யநாதனிடம் பேசினோம். அவர், "அய்யாநாதன், "இன்றைக்குச் சனாதனத் தின் அடையாளம் என்கிறவர்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்தில் முன் நின்றார்களா?
அன்றைக்கு ஒரு சட்டம் கொண்டுவருவோம் என்று சொன்னார் இதே நிர்மலா சீதாராமன். இதுவரை அவர்கள் சட்டத்தைக் கொண்டுவந்தார்களா? அரசியலமைப்புச் சட்டப்பிரிவு இரண்டின் கீழ் நாம் இயற்றிய சட்டம்தாம் உச்சநீதிமன்றக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஜல்லிக்கட்டை நாம் காப்பாற்றித் தந்துள்ளது.
ஆகவே, இந்த ஜல்லிக்கட்டைக் காப்பாற்றியது நிர்மலா சீதாராமன் இல்லை. மோடி இல்லை. அமித்ஷா இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications