39 வயதில் முதல்வர்.. புரட்சி நாயகி! ஆனால் இப்போ? அரசியல் சுழலில் மாயமான மாயாவதி எனும் மாபெரும் ஆளுமை
சென்னை: உத்தரப்பிரதேச தேர்தல் ரேசில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் முன்னாள் முதல்வர் மாயாவதி. அவருடைய அரசியல் பயணம் குறித்தும் தற்போதைய தேர்தல் நிலவரம் குறித்தும் இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சி - பகுஜன் என்றால் பெரும்பான்மை என்று பொருள். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் பெரும்பான்மைக் குரலாக கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக உத்திரப்பிரதேசத்தில் ஒலித்துவரும் குரல்.
பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை. நீல நிறத்தில் யானை. அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற 80-களில் கன்ஷிராம் தோற்றுவித்தது தான் பகுஜன் சமாஜ் கட்சி. இந்தக் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பே கன்ஷிராமுக்கு அறிமுகமானவர் மாயாவதி.
உத்திரப்பிரதேசத்தில் பலரையும் எரிச்சல் அடையச் செய்த ஒரு பெயர். பலரை கரைசேர்த்த பெயர், பலருக்கு அரணாக இருந்த பெயர் - மாயாவதி நைனா குமாரி.
இளங்கலை முடித்துவிட்டு சட்டப் படிப்பு படித்துக்கொண்டே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார் மாயாவதி. ஆட்சி அதிகாரம் செய் என்று கன்ஷிராமால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் தான் இந்த மாயாவதி.
சுகாதார கட்டமைப்புகளுக்காக தமிழகத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ3,000 கோடி நிதி- பிரதமர் மோடியின் முழு உரை!
அரசியலில் மாயாவதி
குடும்பத்தை எதிர்த்து கன்ஷிராம் சொன்ன ஒற்றை வார்த்தையை நம்பி அரசியலுக்கு வந்தார் மாயாவதி. இந்திய அளவில் அப்போது அரசியலில் கோலோச்சிய பெண்கள் இந்திரா காந்தி, ஜெயலலிதா, மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி. இவர்களில் மாயாவதி மட்டுமே தட்டுத்தடுமாறி, எந்த பின்புலமும் இல்லாமல் வந்தவர், உ.பி போன்ற சாதி அதிகாரமுள்ள, ஆணாதிக்க நிலவுடமையுள்ள மாநிலத்தில் இருந்து வந்துவர்.
தேர்தல் களம்
தலித் என்ற அடையாளத்தோடு இயங்குவது மாயாவதிக்கு பெரும் சவாலாகவே இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி ஆரம்பித்ததும் சந்தித்த முதல் தேர்தலிலேயே கட்சிக்காகப் பிரசாரத்துக்குப் போனார். அதற்கடுத்த தேர்தலில் போட்டியிட்டார் மாயாவதி. தோல்வியே கிடைத்தது. மீண்டும் மீண்டும் மாநிலமெங்கும் சுற்றினார். தனக்கான அடையாளத்தை உருவாக்கினார்.
எம்.எல்.ஏ
1989 உத்திரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பிஜ்மோர் தொகுதியில் போட்டியிட்டார் மாயாவதி. கடும் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக 35 வயதில் எம்.எல்.ஏ ஆனார். வெற்றி அவரை அமைதியாக்கும் என்று நினைத்தவர்களுக்கு, வெற்றி இன்னும் உழைக்கவைக்கும் என்று மாநிலமெங்கும் சுழன்று சுழன்று கட்சியை வலுப்படுத்தினார்.
பாபர் மசூதி
பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தார் மாயாவதி. முஸ்லிம் மக்களுக்காக தொடர்ந்து மாயவதி நின்றதால், முஸ்லிம் சமூகத்தினர் மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தியா முழுதும் தனியார் மயமாக்கத்தை காங்கிரஸ் கொண்டுவருகிறது. இதனால், பட்டியல் சமூகத்துக்கு கிடைக்கும் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அபகரிப்பதாக மத்தியில் ஆளும் கட்சியை எதிர்த்தும் குரல் கொடுத்தார்.
முதல்வர்
அடுத்து வந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிராக முலாயம் சிங்குடன் கைகோர்த்தார் மாயாவதி. பகுஜன் சமாஜூம் சமாஜ்வாடி கட்சியும் போட்டி போட்டு வேலை செய்தது. விளைவு பா.ஜ.க ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கியது. இதில் பெரும் பங்கு மாயாவதிக்குத் தான் உள்ளது. கூட்டணி வெற்றியில் மாயாவதி உத்திரப்பிரதேசத்தின் முதலைமைச்சரானார். 39 வயதில் தலித் சமூகத்திலிருந்து, முதல்வரானவர் இவர் தான். ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் இதைக் கொண்டாடினர். அதுவும் உத்திரப்பிரதேசம் போன்ற சாதி வன்முறை நிகழும் ஒரு மாநிலத்தில் தலித் ஒருவர் முதல்வரானதை சமூகநீதி என கொண்டாடினர்.
பிரதமர் கனவு
இரண்டு முறை ஹரோரா தொகுதியில் போட்டியிட்டும், இரண்டு முறை மேலவை உறுப்பினராகவும் இருந்து முதல்வர் நாற்காலியை நான்கு முறை அலங்கரித்தார் மாயாவதி. அவர் முதல்வராக இருந்தபோது உ.பி தாண்டி இந்தியா முழுவதும் கட்சி பலமானது. தேசியக் கட்சியாக பகுஜன் சமாஜ் உருவெடுத்தது. மாயாவதியின் புகழ் இந்தியாவெங்கும் வளர்ந்தது. அடுத்த பிரதமர் இவர் தான் என அரசியல் வல்லுனர்கள் சொன்னார்கள். பிரதமர் ஆசையும் மாயாவதிக்கு இருந்தது. வாஜ்பாயி அரசுக்கு சிவப்புக் கொடி காட்டி தான் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நிரூபித்தார்.
கணிக்க முடியாதவர்
மாயாவதியின் வாழ்க்கை வரலாறை பலர் எழுதி இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது எல்லாம் ஒன்று தான் 'மாயாவதி - எளிதில் உணார்ச்சிவசப்படுபவர், கணிக்கவே முடியாதவர்'. இதுதான் அவரை அசைத்துப்பார்க்க முடியாத உயரத்துக்கு கொண்டு சென்றது. அவர் எடுத்த அசாத்திய முடிவுகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
முரண்
கன்ஷிராமுக்கும், மாயாவதிக்கும் இடையில் ஆரம்பத்தில் நல்ல புரிதல் இருந்தது. பிறகு அவர்களிடையே மோதல்களும் அதிகமானது. கன்ஷிராம் மிகவும் உணர்ச்சிவசப்படுவார். அதனால் ஆத்திரத்தில் அனைவரையும் கடுமையான சொற்களால் அழைப்பார். இது மாயாவதிக்குப் பிடிக்கவில்லை, தன்னை யாரும் அதிகாரம் செய்வதை மாயாவதி ஏற்றுக்கொள்ளமாட்டார். கன்ஷிராம் தன்னை திட்டினால் அதற்கு, அவரது மொழியிலேயே மாயாவதி பதிலடி கொடுப்பாராம்.
ஆட்சி
மாயாவதியின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முன்பைவிட கட்டுக்குள் இருந்தது. அங்கு நட்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறைந்திருந்தன. பொருளாதாரத்திலும் உத்தரப் பிரதேசம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. உத்திரப்பிரதேசத்தில் பட்டியலினச் சமூகத்தினருக்கு நிலம் வழங்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினார் மாயாவதி.
காணாமல் போகும் மாயாவதி
இப்படி யாராலும் அசைக்க முடியாத சக்தியாக உத்திரப்பிரதேசம் முழுதும் வலம் வந்த மாயாவதி, நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடவில்லை. இதுதான் நிஜன். மாயாவதி எனும் மாபெரும் தலைமை, இப்போதைய அரசியல் ஆற்றில் காணாமல் போய்கொண்டிருக்கிறார். ''மாயாவதி கட்சியைக் கடத்தி, தனியார் நிறுவனமாக மாற்றிவிட்டார். உ.பி தேர்தலில், பகுஜன் சமாஜைத் தோற்கடிக்கும் எண்ணத்தோடிருக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறோம். பஞ்சாப் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்வோம்'' என கன்ஷிராமின் குடும்பம் மாயாவதி மீது குற்றச்சாட்டை வைக்கிறது.
கட்சி மாறும் தலைவர்கள்
பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர். சிலர் பா.ஜ.க-வில், இன்னும் சிலர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். முக்கியத் தலைவர்கள் இல்லாமல் பகுஜன் சமாஜ் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான், நடக்கவிருக்கும் உத்திரப்பிரதேச தேர்தலில், மாயாவதி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை கட்சி வெளியிட்டது. மும்முனை போட்டி நிலவிய உத்திரப்பிரதேச தேர்தல் களத்தில் மாயாவதி பின்வாங்கிவிட்டார். கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம் அவரை இப்படி யோசிக்க வைப்பதாவே தெரிகிறது. கூட்டணி இல்லை, கட்சி மாறும் நிர்வாகிகள், குறையும் மக்கள் செல்வாக்கு என ஆரம்பகால மாயாவதியை இப்போது யாரும் பார்க்க முடியவில்லை.சைக்கிளில் ஊர் ஊராக சென்று கட்சியை வளர்த்தவர் இன்று தேர்தல் ரேசில் இருந்து பின்வாங்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்தல் குதிரையில் இருந்து மாயாவதி ஒதுங்கி இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எப்போதும் ஒலிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.