பாமக MLA மகன் -மருமகள் சமரசம்! கோடி ரூபாய் ஃபீஸ் வாங்குவதை விட மேலானது! வக்கீல்களை பாராட்டிய நீதிபதி
சென்னை: மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவத்தின் மகனும் மருமகளும் குழந்தையின் எதிர்காலம் கருதி சேர்ந்து வாழ விரும்புகிறோம் என தெரிவித்ததால் வரதட்சணை புகார் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
2 தரப்பு வழக்கறிஞர்களும் வழக்கை இழுத்தடிக்க விரும்பாமல் தம்பதியை சேர்ந்து வாழ வைக்க எடுத்த முயற்சி வெற்றி பெற்றதால் அவர்களை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டியுள்ளார்.

வரதட்சணை புகாராலும், கருத்து வேறுபாடு காரணமாகவும் பிரியவிருந்த கணவன் மனைவியை மீண்டும் சேர்ந்து வாழ வைத்ததற்காக, கோடி ரூபாய் ஃபீஸ் வாங்குவதை விட நீங்கள் செய்திருப்பது மேலானது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ.ஆக இருப்பவர் சதாசிவம். இவரது மனைவி பெயர் பேபி, மகன் பெயர் சங்கர். தனது மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு மேட்ரிமோனியல் மூலம் பெண் பார்த்து பெரியவர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு, முருகேசன் என்பவரது மகள் மனோலியாவை திருமணம் செய்து வைத்திருக்கிறார் சதாசிவம் எம்.எல்.ஏ.
மகனுக்கு திருமணம் நடத்தி வைத்த போது சதாசிவம் எம்.எல்.ஏ.ஆக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக அவர் மீது மருமகள் வீட்டார் தரப்பில் சில நாட்களுக்கு முன்னர் புகார் தெரிவிக்கப்பட்டு அது நீதிமன்றம் வரை சென்றது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில், தங்கள் குழந்தையின் எதிர்காலம் கருதி தாங்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக பாமக எம்.எல்.ஏ. சதாசிவத்தின் மகன் சங்கரும், மருமகள் மனோலியாவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தம்பதியை சேர்ந்து வாழ வைப்பதற்காக முயற்சி எடுத்த இரண்டு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications