தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்.. இன்று தான் கிராமங்களில் மிகப்பெரிய திருவிழா
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.. மாடுகளை குளிப்பாட்டி, பொங்கல் வைத்து விவசாயிகள் நன்றி செலுத்தினார்கள்..
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி 14ம்தேதி தொடங்கி ஜனவரி 17ம் தேதி நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஜனவரி 15ம் தேதியான நேற்று தை 1ம் தேதி என்பதால் தை பொங்கல் கொண்டாடப்பட்டது. நெற்பயிர்கள் விளைய காரணமாக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கரும்புகளுடன் , பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டனர்.

தை இரண்டாம் நாளான இன்று மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. விவசாயிகளின் நண்பனாகவும், உழவுக்கு உயிருட்டும் தோழனாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி செலுத்தும் வகையில் விருந்து படைத்து மாட்டும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு காலையிலேயே மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளை குளிக்க வைத்து, கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகுபடுத்தினார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசினார்கள்.
இதேபோல் மாடுகளுக்கு பழைய மூக்கணாங் கயிறுகளை மாற்றி புதிய மூக்கணாங் கயிறுகளை மாட்டினார்கள். அத்துடன் தாம்புக் கயிறு அணிவித்து மகிழ்ந்தனர். அதன் பின்னர், வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை படைத்து, பின்னர் அவற்றை மாடுகளுக்கு ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். '
இன்று மாட்டுப்பொங்கல் தினம் மட்டுமல்ல .. திருவள்ளுவர் தினமும கூட.. இன்று இறைச்சி கடைகளில் கூட்டம் வழிந்தோடுகிறது. இன்று பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுவாக மாட்டுப்பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் விடுமுறைவிடப்படுவது வழக்கம். அந்த வகையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளன. அதே நேரம் கிராமங்களில் இன்று பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாள் என்பதால், உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், சிறுவர் விளையாட்டுகள் என கொண்டாட்டம் களை கட்டி உள்ளது.
இதேபோல் பல்வேறு ஊர்களில் மாடுகள் இன்று மாலை ஊர்வலமாக அழைத்து செல்லப்படும். மாடுகள் வீர நடைபோடும் அழகே தனி அழகு தான். இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல்வேறு ஊர்களில் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications