ஆளுநர் வாய்ஸில் விஜய்! ‘தமிழ்நாடு’ பதிலாக ‘தமிழகம்’ வந்தது ஏன்?
சென்னை: விஜய் தனது கட்சி பெயரில் 'தமிழகம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
நடிகர் விஜய் தான் புதியதாகத் தொடங்கியுள்ள கட்சிக்கு, 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயர் சூட்டி இருக்கிறார். அதற்கான அறிவிப்பை இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இதற்காக புஸ்ஸி ஆனந்த், டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் சென்று முறைப்படி கட்சியைப் பதிவு செய்வதற்காக வேலைகளில் இறங்கி இருக்கிறார்.
பலரும் எதிர்பார்த்ததைப் போலவே அவர் கட்சி தொடங்கி இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் எனப் பலரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால், அவரது வயது அவரது உடல்நிலையும் அதற்கு இடம் தரவில்லை. ஆனால், விஜய்க்கு இன்னும் காலங்கள் உள்ளன. அவர் முழுவதுமாக நடிப்பை விட்டு விலகி, அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்று அறிக்கையில் கூறி இருக்கிறார்.

2026 சட்டசபைத் தேர்தல்தான் தனது இலக்கும் என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
முழு நேர அரசியல் என்பது வெறும் நேரம் சார்ந்தது மட்டுமல்ல; பணம் சார்ந்ததும். கட்சியை நிர்வகிக்க அவர் பல கோடிகளை இறக்க வேண்டி இருக்கும்.
அப்படி செலவு செய்யப்படும் முதலீடுகள் எப்படி வரும் கிடைக்கும் என்பது மிகப் பெரிய கேள்வி. நடிகர் விஜயகாந்த், தனது சொத்துகளை இழப்பதற்காக இடமாகவும் அவரது கட்சி இருந்துள்ளது.

இது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். தனது கட்சிக்கு நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயர் சூட்டி இருக்கிறார். தமிழ்நாடு என்பதற்குத் தமிழகம் என்று ஒரு பெயரும் உள்ளது. ஆனால், அது அரசு ஆவணங்களில் உள்ள பெயர் இல்லை.
தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 1952 தொடங்கி திமுக பல போராட்டங்களைச் செய்துள்ளது. அப்படி எல்லாம் பெயர் வைக்க முடியாது என அன்றைய காமராஜ் தலைமையிலான ஆளும் கட்சி அதி மறுத்துள்ளது. தீர்மானம் தோல்வி அடைந்தது வரலாறு. அண்ணாதுரை ஆட்சிக்கு வந்ததும் முழுப் பலத்துடன் மீண்டும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது வரலாறு.

ஆனால், சில மாதங்கள் முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவி அரசு விழாவின் பத்திரிகையிலேயே தமிழக ஆளுநர் என்று அச்சிட்டார். தமிழ்நாடு என்று சொல்ல வேண்டாம். தமிழகம் என்றாலே போதும் எனப் பேசியும் இருந்தார். அந்தப் பேச்சுக்கு திமுக மிகப் பெரிய எதிர்வினை காட்டியது. ஆளுநருக்கு எதிராக அக்கட்சியினர் கொதித்து எழுந்தனர்.
அரசு ஆவணங்களில் உள்ள பெயரை ஏன் மாற்றிக் கூறுகிறார். ஆளுநரான அவர் அரசு ஆவணத்தில் என்ன உள்ளதோ அதைத்தான் போடவேண்டும் என்று குரல் எழுப்பினர். அந்த விவாதங்கள் எல்லாம் ஏதோ 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது அல்ல. சமீபத்தில் சில மாதங்கள் முன்னதாக நடந்தவை.

அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் நடிகர் விஜய் இந்த விவாதங்களை எல்லாம் கேட்டாரா? இதைப்பற்றி எல்லாம் அவருக்கு ஏதேனும் கருத்துகள் உள்ளனவா? என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அவர் அது குறித்த விளக்கங்களை அளித்ததில்லை.
ஆனால், இன்றைக்குப் புதியதாக ஒரு கட்சியைத் தொடங்கி உள்ள அவர், 'தமிழக' என்று தமிழ்நாட்டைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு என்று ஏன் வைக்க அவருக்கு மனம் வரவில்லை என்பது முதல் கேள்வி.

பொதுவாகத் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ்தான் 'தமிழக' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. மாநில உரிமைப் பேசும் கட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு என்பதில்தான் பெருமை கொள்கின்றன.
ஆனால், விஜய் 'தமிழ்நாடு' என்று கட்சி பெயரை வைக்காமல் 'தமிழக' என்று இணைத்துக் கொண்டுள்ளார். ஒருவேளை அவர் ஆளுநர் குரலைத் தனது கட்சியின் கருத்தாக ஏற்றுக் கொள்கிறாரா? என்பது மிகப் பெரிய கேள்வி.
இந்தப் பெயர் வெளியாவதற்கு முன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்றே பல ஊடகங்கள் கூறி வந்தன. அதேபோல் 'தமிழக மக்கள் ஜனநாயக கழகம்', அடுத்து 'வெல்லும் தமிழக கழகம்' இப்படித்தான் பெயர்கள் ஊகிக்கப் பட்டன.

இதில் ஒன்றில்கூட தமிழ்நாடு என்று வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. அனைத்திலும் தமிழக என்றே ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆக, ஒரு புதிய கட்சிக்கு விதவிதமாக பெயர்களை வைத்து அதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த விசயத்தில் விஜய்யின் ஆலோசனையிலிருந்ததாகச் சொல்லப்படும் ஒரு பெயரிலும் தமிழ்நாடு என்பது இல்லை.
எனவே இது திட்டமிட்டதா? ஒருவேளை பாஜகவின் பி டீம் என்று விஜய்யைப் பலரும் சந்தேகித்து வரும் சூழலில், ஆளுநர் கருத்தை ஏற்றுத் தமிழகம் என்கிறாரா விஜய்?
உண்மையில், அப்படி இல்லை. நாங்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று விஜய் சொல்வது உண்மை என்றால், அவர் ஏன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு யாருக்கும் ஆதரவு இல்லை என்கிறார்.
அப்படி என்றால், மோடி அரசு மீது தனக்கு விமர்சனம் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது உள்ள திமுக அரசு மீதுதான் விமர்சனம் உள்ளது. அதனால்தான் சட்டசபைத் தேர்தலை முக்கிய இலக்காகக் கையில் எடுத்துள்ளோம் என்கிறாரா?
2026இல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போகின்ற இவர், நாடாளுமன்றத் தேர்தல் காலம் வரை அமைதி கட்சியின் பூர்வாங்கப் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு 2025இல் கட்சிப் பெயரை அறிவித்திருக்கலாமே?
இப்படியான சந்தேகங்கள் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. அப்படி எல்லாம் இல்லை இவை எல்லாம் தற்செயலாக நடந்தவை என்று விஜய் விளக்கம் அளித்தால், நாம் சொல்வது ஒன்றைத்தான். அரசியலில் எதுவும் தற்செயலானது இல்லை என்பதைத்தான்.












Click it and Unblock the Notifications