அண்ணா பல்கலை விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை மேற்கொள்வதற்காக தேசிய மகளிர் ஆணையம் இன்று இரவு சென்னை வருகை தரவுள்ளனர். இதுதொடர்பான விசாரணையை நாளை மேற்கொள்ளவுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் அவர் மீது இருக்கும் நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் அடங்கிய எப்ஐஆர் காப்பி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், பாலியல் வன்முறை தொடர்பான இந்த வழக்கை விசாரிப்பதற்காக மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் தொடர்பான எப்ஐஆர் காப்பி பொது வெளியில் வெளியானதற்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும என்றும், கட்டணம் எதுவும் வசூலிக்காமல் மாணவி தன் படிப்பை பல்கலைக்கழகத்திலேயே தொடர்ந்து முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளியிட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல் துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் இருவர் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரிக்கவுள்ளனர்.
இதற்காக டெல்லியில் இருந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவின் ஷிவானிடே ஆகியோர் இன்று இரவு சென்னை வருகை தரவுள்ளனர். நாளை இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர்.
இதுதொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இதற்கு முன்னதாக அவர் செய்த எந்தவொரு குற்ற வழக்குகள் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது.
இந்த அலட்சியத்தால் தான் ஞானசேகரனை போல் தொடர்ந்து குற்றச் செயல்களைச செய்யும் துணிச்சலை அந்த நபருக்கு கொடுத்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து வருவது கடும் கவலையை எழுப்பியுள்ளது என்று அந்த ஆணையம் குறிப்பிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications