உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: உள் தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் விடைபெற்ற போதிலும், வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. மழை இல்லாததால், நீர் நிலைகள் வறண்டு போய் காணப்படுகின்றன. இதனால், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கிராம மக்கள் குடிநீர் தேடி அலைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், பகல் நேரத்தில் உள் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் 2ல் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெப்பம் அதிகம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் கொடைக்கானல் பகுதியில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியை ஒட்டி உள்ள குமரிக் கடல், மாலத்தீவு போன்ற பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அந்த பகுதியில் எச்சரிக்கையுடன் செல்லும்படியும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து, அதையொட்டியுள்ள தமிழக பகுதிகள் பயன் பெறும். முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளும், குமரி மாவட்டத்தின் நீராதாரங்களும் தென்மேற்குப் பருவமழையால் பயன்பெறும். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சராசரியை விட குறைவாகவே மழை பதிவாகும் நிலையில், இந்தாண்டு, மாற்றம் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications