பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய நாள்.. இன்று தொடங்குகிறது அரசு பொது செய்முறைத் தேர்வு
பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது
சென்னை: தமிழ்நாட்டில் பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது. இம்மாதம் எழுத்துத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் முன்னதாக இந்த தேர்வு தொடங்க உள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வரும் மார்ச் 13 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கும் இந்த பொதுத்தேர்வுக்கான கடைசி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

செய்முறைத் தேர்வு
வழக்கமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு முன்னதாக செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொது செய்முறைத் தேர்வுகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்க உள்ளன.

17 லட்சம் மாணவர்கள்
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வுகளை எழுத இருக்கிறார்கள். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் மட்டும் சுமார் 95 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுத இருக்கிறார்கள்.

ஆய்வக பொருட்கள்
இந்த செய்முறைத் தேர்வுகளுக்காக பள்ளி செய்முறை கூடங்களில் ஆய்வக பொருட்களை பரிசோதித்து இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றன. செய்முறைத் தேர்வின்போது எந்த சிக்கல்களும் ஏற்படாத வகையில் முன் தயாரிப்பு பணிகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு உள்ளன. தேர்வின்போது பறக்கும் படை சோதனைகளும் நடத்தப்படும்.

சுற்றறிக்கை
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலமாக அனுப்பி இருக்கிறது. அதனை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து மார்ச் 9 ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வை நடத்த வேண்டும். செய்முறைத் தேர்வில் ஒரு சுற்றுக்கு அதிகபட்சமாக 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்து இருக்கிறது.

தலைமை ஆசிரியரே பொறுப்பு
அதில் சில மாணவர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அரசு சலுகை அளித்துள்ளது. அவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த செய்முறைத் தேர்வின்போது ஏற்படும் சிக்கல்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என்றும், கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வை நடத்த வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications