Special: 'மனிகே மகே ஹிதே' to 'ஊ சொல்றியா மாமா' வரை.. "ஹஸ்கி வாய்ஸ்" சாங்ஸ் ஹிட்டடிக்க காரணம் என்ன?
சென்னை : ''ஊ சொல்றியா மாமா..'' பாடல் வெளியானதிலிருந்து பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. அதே சமயம் ஆண்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் பாடல் வரிகளுக்காக எழுந்தது.
2021-ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் பாடலாக அறிவிக்கப்பட்டது. அதைப்போலவே நாடு கடந்தும் மற்றொரு பாடலும் இணையத்தை ஆட்டிப்படைத்தது. குறிப்பாக இன்ஸ்டா ரீஸ்களில் பிரபலங்களே பயன்படுத்தும் அளவுக்கு ஹிட்டடித்தது 'மனிகே மகே ஹிதே' பாடல்.
யொஹானி எனும் சிங்களப்பெண் பாடிய 'மனிகே மகே ஹிதே' எனும் பாடல் கண்டங்கள் கடந்தும் கோலோச்சி வருகிறது. கிட்டத்தட்ட மூன்று கோடிக்கும் அதிகமானப் பார்வையாளர்களைக் கடந்து யூ-டியூபில் சாதனைப் படைத்து வருகிறது யொஹானியின் இந்தப் பாடல்.

மனிகே மகே ஹிதே
லண்டனில் இசைக் கற்று, ஸ்ரீலங்காவில் இசைப்பயிற்சி மேற்கொண்ட யொஹானியின் குரலுக்கு அங்கே ரசிகர்கள் அதிகம். கொரோனா தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த சமயத்தில் உருவானது மனிகே மகே ஹிதே பாடல். பாடலாசிரியர் தூலனின் வரிகளுக்கு யொஹானி உருவம் கொடுக்க, 2021ல் இணையத்தில் தீயாய் பரவியது இந்தப்பாடல்.

இணையத்தில் நம்பர் 1
மே மாதம் 2021ல் வெளியானபோது, இந்தப்பாடலுக்கு ஸ்ரீலங்காவில் நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால் உலக அளவில் ட்ரெண்டாகக் காரணமாக இருந்தது இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தான். ஆகஸ்ட் மாதம் தன்னுடைய பழைய நடத்துக்கு, இந்தப்பாடலோடு கூடிய வீடியோவை தன்னுடைய டிவிட்டரில் வெளியிட்டார் அமிதாப். காட்டுத்தீயாய் பாடல் இந்தி ரசிகர்களிடம் பரவியது.

ரீல்ஸுக்கான பாடலா?
மொத்த இன்ஸ்டாகிராமுமே இந்தப்பாடலைத்தான் குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தது. சும்மா நின்று கொண்டு, இந்தப்பாடலோடு ரீல்ஸ் செய்தாலே மில்லியன்ஸில் வியூஸ் போனது. ரீல்ஸ் நாயகர்களின் ஆஸ்தான பாடலாகவே மாறியது மனிகே மகே ஹிதே பாடல். இனம், மொழி கடந்து ஒரு பாடல் இந்தளவு சென்று சேர்ந்ததற்கு முக்கியக் காரணம், யொஹானியின் குரல். ஹஸ்கியான குரலில் அவர் பாடும் போது, கேட்பவர்கள் அனைவருமே கிறங்கித்தான் போனார்கள்.

ஊ சொல்றியா மாமா
புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடல் ஐந்து மொழிகளில் வெளியானது. அத்தனை மொழிகளிலுமே மிகப்பெரிய ஹிட்டடித்தது. திரை நட்சத்திரம் சமந்தா, பாடல் வரிகள் என அதைத்தாண்டிய ஒன்று ரசிகர்களைக் கவர்ந்தது. அது பிண்ணனிக் குரல் தான். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஹஸ்கி குரலில் பாடல் பாடியதுதான் முக்கியக் காரணம். குறிப்பாகத் தமிழில் பாடியது நடிகை ஆண்ட்ரியா. அவருடைய வசீகரிக்கும் குரல், ஹஸ்கியாக இருக்கும்போது யார் தான் கிறங்க மாட்டார்கள்.

குரலிலும் கவர்ச்சியா?
இசை எல்லாமும் செய்யும் என்பார்கள். அதுபோலத்தான், பலரை இந்தப்பாடல்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. இதற்கானக் காரணத்தை விவரிக்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி. ''பெண்கள் ஹை ஹீல்ஸ் போடுவதும், சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் போடுவதும் எதற்காக.. உடைகள் அணிவதும், மேக்கப் போடுவதும் அவரவர் சுதந்திரம் என்றாலும், அவர்கள் எதற்காகச் செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். தனக்குப் பிடித்த யாரோ ஒருவருக்காகவோ அல்லது தனக்குப் பிடித்தவரை வசீகரிக்கவேதான் இதையெல்லாம் செய்வார்கள். அப்படித்தான் ஹஸ்கி குரலின் பேசுவதும் பாடுவதும் வரும். ஹஸ்கி குரலில் பாடும் போது ஆண் பாலியல் ரீதியாகத் தூண்டப்படுகிறான். அது அவனுக்குப் பிடித்திருக்கிறது. அவனைத்தூண்ட ஹஸ்கி குரல் ஒரு கருவியாகிப் போனது. இவர்தான் பாட வேண்டும் என்றில்லை, ஹஸ்கி குரலில் எந்தப் பெண் பாடினாலும் ஆண் தூண்டப்படுவான். தனக்குப் பிடித்த ஓரு விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்டு, அதையும் தனக்குப் பிடித்ததாக ஏற்றுக்கொள்கிறான். இந்தப்பாடல் பல பெண்களுக்கும் பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்குக் காரணம், மெஜாரிட்டியான ஆண்களுக்குப் பிடித்திருக்கிறபோது, பொதுவாகவே பெண்களுக்கும் பிடித்துப்போகும். பிடிக்காமல் போனால்தான் ஆச்சரியம்''.

டிரெண்டிங்
ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸட்ஸ்ரியில் காலடி எடுத்து வைத்தபோது அதுவரை தமிழ் திரை இசை கண்டிறாத பல மாற்றங்களைச் செய்தார். அதில் ஒன்றுதான், பாடகிகளை உச்ச ஸ்தாபியில்.. ஏறத்தாழ ஆண் குரலில்.. பாட வைப்பது.. வீர பாண்டி கோட்டையிலே போன்ற ஒரு ஹை-பிட்ச் பாடலை அதற்கு முன்பு பாடகிகள் பாடி தமிழ் சினிமா பார்த்தது இல்லை. "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்.." பாடலில் வரும் "சந்திரலேகாஆஆஆ" வரிகளின்போது இதயத்தில் ஆயிரம் சரவெடி வெடிப்பதை போன்ற உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியுமா? அப்படித்தான் இப்போது ஹஸ்கி வாய்ஸ் காலம் என்கிறார்கள் திரை வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications