2012இல் வைர விழா.. 2021இல் நூற்றாண்டு விழா.. குழப்பத்தில் தமிழ்நாடு சட்டசபையின் வயது.. என்ன காரணம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற 60ஆவது ஆண்டு விழாவைக் கடந்த 2012ஆம் ஆண்டு தான் அதிமுக அரசால் கொண்டாடப்பட்ட நிலையில், இப்போது நூற்றாண்டு விழாவை திமுக அரசு கொண்டாடியுள்ளது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தமிழ்நாடு அரசு சார்பில் சட்டசபை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படமும் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. அதற்குக் கீழே, 'காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை
கருணாநிதியின் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் மு.கருணாநிதியின் படத்தைத் திறந்ததில் மகிழ்கிறேன். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் எனத் தமிழில் பேசினார். இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் யாருக்கும் பங்கேற்கவில்லை. அதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன காரணம் முக்கியமானது.

அதிமுக கூறும் காரணம்
சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கும் நிகழ்ச்சியை திமுகவினர் புறக்கணித்தனர் என்று கூறிய ஜெயக்குமார் சட்டசபையின் வரலாற்றையே மாற்றியமைக்க திமுக முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார். அதேபோல பத்திரிக்கையாளர் சுமந்த் சி ராமனும், "2012ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையின் வைர விழா கொண்டாடப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. 2012க்கும் 2021க்கும் இடையில், 40 ஆண்டுகள் கடந்துவிட்டதா?" என ட்வீட் செய்துள்ளார்.

2012இல் வைர விழா
2012இல் தான் சட்டசபை வைர விழா - 60ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது என்றால், ஒன்பது ஆண்டுகளில் நூற்றாண்டு விழா எப்படிக் கொண்டாடப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் எழும். இதற்கான விடை சற்றே சிக்கலானது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம். கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையின் வைரவிழா சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. இதில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டனர்.

குழப்பம்
ஆனால், இந்த விழாவில் திமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. 1997ஆம் ஆண்டிலேயே திமுக ஆட்சியில் சட்டசபைக்குப் பவள விழாவை நடத்தப்பட்டதாகவும் ஓமந்தூராரில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை முடக்கவே ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விழா நடத்துகிறார் என திமுக சார்பில் விமர்சிக்கப்பட்டது. 1952ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ராஜாஜி அரசு பதவியேற்றதைக் கணக்கில் கொண்டே வைரவிழா நடத்தப்பட்டதாக அதிமுக விளக்கமளித்தது.

தமிழ்நாடு சட்டசபை வரலாறு
இதில் யார் கூறுவது சரி என்பதைப் பார்ப்பதற்கு முன் தமிழ்நாடு சட்டசபையின் வரலாற்றைச் சற்றே பார்ப்போம். கடந்த 1861ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்ற அவை முதலில் உருவாக்கப்பட்டது. அதன் அதிகாரங்கள் 1891இல் விரிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1909ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலேயே தேர்தல் மூலம் சட்டசபை உறுப்பினர்கள் நியமிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 1919இல் மொண்டேகு - கெமஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக இந்தியாவிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் சென்னை மாகாண சட்டசபை செயல்படத் தொடங்கியது. பின்னர் 1935இல் மேலவை மற்றும் கீழவையுடன் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் தேர்தல் நடத்தப்பட்டு, ராஜாஜி தலைமையிலான அரசு 1952இல் பதவியேற்றது. அதன் பிறகு 1969இல் அண்ணா தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலம் என்ற பெயரை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது.

யார் சரி
சட்டசபையின் உண்மையான வயது என்ன என்பதில் தாங்கள் சொல்வதே சரி என இரண்டு தரப்பினரும் கூறி வருகின்றனர். சுமந்த் சி ராமன் இது குறித்து தனது ட்விட்டரில், "1861இல் பிரிட்டிஷ் ஆட்சியில் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உருவாக்கப்பட்டது. 1921இல் அதே கவுன்சில் வேறு சட்டத்தின் கீழ், மாற்றியமைக்கப்பட்டது.
Recommended Video

வென்றவர்கள் எழுதும் வரலாறு
இப்படியிருக்கும்போது தமிழ்நாடு சட்டசபையின் நூற்றாண்டு விழா 2021இல் எப்படிக் கொண்டாட முடியும். எப்படியிருந்தாலும், வரலாற்றை எப்போதும் வென்றவர்களே எழுதுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது" எனப் பதிவிட்டுள்ளார், அவர் கூறுவது போல மீண்டும் வரும் காலத்தில் அதிமுக தலைமையிலான அரசு அமைந்து அப்போது பவள விழாவும் நூற்றாண்டு விழாவும் மீண்டும் கொண்டாடப்பட்டு, அதை இதே காரணத்திற்காக திமுக புறக்கணித்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.












Click it and Unblock the Notifications