ப.சி.யின் கேள்விகளுக்கு பதில் இல்லை.. இதனால்தான் குடும்பத்தைத் தாக்கிப் பேசினாரா மோடி??
சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும், அவரது குடும்பத்தையும் பிரதமர் மோடி தாக்கிப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து பிரதமர் மோடி இரண்டு வார காலத்தில் இரண்டாவது முறையாக தமிழகம் வந்தார். நேற்று திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரை குறிப்பிடாமல் அவரை ரீ கவுண்டிங் மினிஸ்டர் என்றும் குடும்பமாக பெயில் வேண்டி நீதிமன்ற படிகளில் எறிக்கொண்டிருக்கிரார்கள் என்றும் தாக்கி பேசினார்.
திருப்பூர் அருகே பெருமாநல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான திமுகவை குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை மாறாக அவர் முன்னாள் நிதியமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார். இங்கு ஒருவர் தன்னை மட்டுமே அறிவாளி என்று எண்ணிக்கொண்டிருக்கிறார். ஐஸ்கிரீம், சிம்கார்டு ஆகியவற்றுக்கு 'பேமிலி பேக்கேஜ்’ முறை இருப்பதைப்போல் இப்போது சில தலைவர்கள் 'பேமிலி பேக்கேஜ்’ முறையில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஜாமின் பெறுவதற்காக நீதிமன்ற படிகளை ஏறிக்கொண்டிருக்கின்றனர் என்றும் பேசினார்.
எதிர்கட்சியான திமுக குறித்து பெரிய அளவில் எதுவும் பேசாதவர் ப.சிதம்பரம் குறித்து தாக்கிப் பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர்களில் பாஜக அரசை அடிக்கடி விமர்சித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருபவர் ப.சிதம்பரம். இன்று அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் கூட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 50,000 குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டன என்றும் 5 இலட்சம் பேர் வேலையிழந்தனர் என்றும் சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதை நினைவு கூர்ந்த அவர் பணமதிப்பு நீக்கம் செய்த திரு மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
வடக்கு தேயுது.. தெற்கிலாவது தேறுமா.. தென்னகத்தை மோடி சுற்றி வர இதுதான் காரணமா
அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன என்றும் ஒழுங்காக வரி கட்டி நடந்து கொண்டிருந்தத் தொழில்களை நசுக்கியது யார்? ஜிஎஸ்டி அடிப்படையில் நல்ல கொள்கை. அதைக் கோமாளித்தனமாக அமுல்படுத்தி அந்தச் சட்டத்தைப் பொல்லாத சட்டமாக மாற்றியது யார்? பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த திரு மோடி அவர்களே, உங்கள் மடியில் இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ? என்று கேள்வி விடுத்திருந்தார் .
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜகவின் தோல்வி குறித்து பேசியவர் இந்த தேர்வில் பாஜக பெயில்தானே என்றும் கேள்வி விடுத்திருந்தார். ரிசர்வ் வங்கி பிரச்சனையில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள், 6 மாதம் முடிவடைந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பை மாற்ற முயற்சிப்பது ஏன் எனவும் கேள்வி விடுத்திருந்தார். ரபேல் விமானப் பிரச்சனையில் விமானப்படைக்கு தேவையான 126 விமானங்களை வாங்காமல், வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்கியதன் மூலம் இந்த அரசு நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதா என்று வினவியவர் விமானப்படைக்கு தேவையான 126 விமானங்களுக்குப் பதிலாக 36 போர் விமானங்களை வாங்கியதால் அவற்றின் விலை 41.42% அதிகரித்ததாகவும் சிதம்பரம் குறிப்பிட்டார்.
உயர்சாதிப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் கேள்வி எழுப்பியவர் பாஜகவின் கூற்றுப்படி 95% மக்கள் ஏழைகள் என்றால் 125 கோடி மக்கள் ஏழைகளா என்றும் இந்த நாட்டில் ரூ.60000 சம்பளம் வாங்குவோரும் ஏழைகள் ரூ.6000 சம்பளம் வாங்குவோரும் ஏழைகளா என்றும் கேள்வி விடுத்திருந்தார்.
இப்படியாக பாஜக அரசின் பல்வேறு நிலைப்பாடுகள் குறித்து ப.சிதம்பரம் கேள்வி எழுப்பிவருகிறார். காங்கிரஸ் தலைவர்களில் பாஜக அரசை பல்வேறு நிலைகளில் அவர் கேள்வி எழுப்பி வருவதால் அவரது கேள்விகளுக்கு பதில் கூற முடியாத பாஜக அரசும் பிரதமரும் அவரை இப்படி தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதாக கூறப்படுகிறது.