அன்வர் ராஜாவின் மவுனவிரதம்! மகனிடம் அலைபேசி! வீட்டை விட்டு வெளியேறி 7 நாட்கள்! அலைமோதும் 2 யோசனைகள்!
சென்னை: அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.காலத்து சீனியரான அன்வர் ராஜா கடந்த ஒரு வாரகாலமாக ஆழ்ந்த அமைதி காத்து வருகிறார்.
சென்னையில் தங்குவதை தவிர்த்து சொந்தஊரான ராமநாதபுரத்தில் தங்கியுள்ள அவர், தனது அலைபேசியை கூட மகனிடம் கொடுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அன்வர் ராஜாவுக்கு ஆறுதல் தெரிவிக்க அழைப்பவர்களிடம் அவரது மகனே பேசி வருவதாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர். காலம்
அதிமுகவில் எம்.ஜி.ஆரால் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் அன்வர் ராஜா. ஆட்சிமன்ற குழுவில் இடம்பெற்ற 15 உறுப்பினர்களில் 13 பேர் அமைச்சர்களாகவும் ஒருவர்(ஜெயலலிதா) எம்.பி.யாகவும் இருந்த நிலையில், சாதாரண ஒன்றியச் சேர்மனாக இருந்த அன்வர் ராஜாவுக்கும் அந்த வரிசையில் இடம் கொடுத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட அன்வர் ராஜாவை கடந்த வாரம் கட்சியிலிருந்து விலக்குவதாக அறிவிப்பு வெளியானது.

மவுனவிரதம்
இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், இந்த அறிவிப்பை இன்னும் ஜீரணிக்கமுடியாமல் மனதில் புழுங்கிவருகிறாராம். உடனடியாக சென்னையிலிருந்து சொந்த ஊரான ராமநாதபுரம் சென்ற அன்வர் ராஜா, அங்கு மவுன விரதம் இருக்கிறாராம். தனது அலைபேசியை கூட மகனிடம் கொடுத்துவிட்டு, 10 நாட்களுக்கு தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறிவிட்டாராம்.

அழைப்பு
இதனிடையே அன்வர் ராஜாவை திமுகவுக்கு அழைத்து வரும் பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு முன்னெடுத்திருக்கிறதாம். ''ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸால் அவமானப்படுத்தப்பட்டு நானும் வெளியேறினேன், இன்று நான் நல்லா இல்லையா, அதனால் பேசாமல் தளபதியை பார்த்து திமுகவில் சேர்ந்திடுங்கண்ணே, உங்களுக்கு நீங்க எதிர்பார்க்கிற மரியாதையை தலைவர் தருவாரு'' என அமைச்சரிடம் இருந்து அழைப்புகள் சென்றதாம்.

2 யோசனைகள்
திமுக ஒரு பக்கம் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அன்வர் ராஜாவிடம் வேறு கட்சிக்கு செல்லவேண்டாம் என்றும், நாம் ஒன்றாக சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து இ.பி.எஸ்.க்கு குடைச்சல் கொடுக்கலாம் எனவும் பெங்களூரு புகழேந்தி தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் இது தொடர்பான 2 யோசனைகளும் அன்வர்ராஜாவின் மனதில் அலைமோதுவதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications