இந்திய இறையாண்மைக்கு எதிராக அப்படி என்ன பேசினார் வைகோ.? தேசதுரோக வழக்கு கடந்து வந்த பாதை
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், இவ்வழக்கு கடந்து வந்த பாதை குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
பெரும் பரபரப்புகளுக்கிடையே வைகோவிற்கு எதிராக தொடரப்பட்ட தேசதுரோக வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஈழத்தில் போர் உச்சகட்டமாக நடைபெற்று வந்தது. விடுதலை புலிகள் - இலங்கை படையினர் இடையே நடைபெற்ற உக்கிர போரின் இறுதியில், விடுதலை புலிகள் வீழ்ந்தனர்.
விடுதலை புலிகளின் ஆதரவாளரான வைகோ 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் நடைபெற்ற'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியிருந்தார்.
விழாவில் பேசிய வைகோ விடுதலை புலிகளை அழித்தொழிக்க இந்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்துள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் கொடுத்த விடுதலை புலிகளை அழிக்க இந்திய அரசு உதவியுள்ளது. இந்திய அரசின் நிதியுதவியால் பல நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி, ஈழத்தமிழர்களையும் விடுதலை புலிகளையும் இலங்கை அரசு அழித்துள்ளது.
எனவே ஒவ்வொரு தமிழர்களின் சாவுக்கு இலங்கை தான் பொறுப்பு. போர்குற்றங்கள் நிகழ்ந்ததற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சே நிற்க வைக்கப்பட வேண்டும் பலரது இறப்பிற்கு இந்திய அரசு தான் பொறுப்பு. எனவே இந்திய அரசு தன்னுடைய கொள்கைய மாற்றிக்கொள்ள வேண்டும் என பேசினார். மேலும் பல கருத்துகள் மூலம் விடுதலை புலிகளை ஆதரித்தும் இந்திய அரசை எதிர்த்தும் வைகோ பேசினார்.
பரபரப்பை ஏற்படுத்திய தேச துரோக வழக்கு.. 2009ல் திமுக ஆட்சியில் தொடரப்பட்டது!
இதனையடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் வைகோ மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து தாமாக நீதிமன்றத்தில் ஆஜராகி வைகோ சிறைக்கு சென்றார். பல நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமினில் விடுதலையானார்.
இந்த தேசதுரோக வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த மாற்றப்பட்டது.
பின் சென்னை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை நகலும் வழங்கப்பட்டு, சாட்சி விசாரணைகள் தொடங்கின இதில் கடந்த மாதம் 9 அரசு தரப்பு சாட்சிகளிடம் வைகோ தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி முடித்தது. தொடர்ந்து சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடிப்படையாக கொண்டு வைகோ நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
நேரில் ஆஜரான வைகோ கடந்த 2009-ல் நான் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வெளியான அதே புத்தகம், கடந்த 2008ம் ஆண்டு ஆங்கிலத்தில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிடப்பட்டது. அப்போது நான் பேசியதற்காக இதே குற்றச்சாடில் என் மீது வழக்கு போடப்பட்டது. ஆனால் அந்த வழக்கு விசாரணையில் இருந்து நான் விடுதலையாகி விட்டேன் என விளக்கமளித்தார்
பின்னர் கடந்த 19-ம் தேதி வைகோ மற்றும் அரசு தரப்பு என இருவரும் ஒருநாள் முழுக்க வாதிட்டனர். வாதங்கள் முழுவதையும் கேட்ட நீதிபதி சாந்தி அனைத்து விசாரணைகளும் முடிவுற்றது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இந்திய இறைணாண்மைக்கு எதிராக வைகோ பேசியுள்ளது நிரூபனமாகியுள்ளதாக கூறியுள்ள நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.