ஆளுநர் மாளிகையில் விறு விறுவென நடந்த விழா! 9 நிமிடங்களில் முடிந்த அமைச்சர் பதவியேற்பு வைபவம்!
சென்னை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர் பதவியேற்பு விழாவானது வெறும் 9 நிமிடங்களில் நிறைவுற்றது.
சரியாக காலை 10.30 மணிக்கு தொடங்கிய அமைச்சர் பதவியேற்பு விழா 10.39க்கு எல்லாம் முடிந்துவிட்டது.
அதன் பிறகு நடைபெற்ற குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிட்டது. அதேபோல் தேநீர் விருந்து கொடுக்கும் நிகழ்வும் சில நிமிடங்களில் நடைபெற்று முடிந்தது.

இப்படியாக 10.30 மணி முதல் 11.00 மணிக்குள் எல்லா நிகழ்வுகளும் முடிந்து ஆளுநர் மாளிகையிலிருந்து அமைச்சர்களும், முதலமைச்சரும் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
அமைச்சராக பொறுப்பேற்பதற்கு செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் செயல்படுவேன் என உறுதியளித்தார்.
தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையிலும், முதல்வரின் மனதில் இடம் பிடிக்கும் வகையிலும் ராஜா அமைச்சராக செயல்பட வேண்டும் என அவரது தந்தையும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அறிவுரை வழங்கினார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற ராஜா, அதன் பிறகு கோபாலபுரம் இல்லம் புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர்களின் இலாக்காக்கள் பெரியளவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள் மத்தியில் சிரிப்பை பார்க்க முடியவில்லை.
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோரை செய்தியாளர்கள் சூழ்ந்த போதும் அவர்கள் பதில் ஏதும் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்கள்.












Click it and Unblock the Notifications