நார்த்ல போய் சுத்துங்க.. தவறாய் பேசிய அதிகாரி! பொரிந்து தள்ளிய பெண்! மன்னிப்பு கேட்ட சைலேந்திர பாபு
சென்னை : சென்னையில் இரவு நேரத்தில் கடற்கரையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் 10 மணிக்கு மேல் கடற்கரையில் நடக்க வேண்டும் என்றால் வட இந்தியாவுக்கு செல்லுங்கள் என காவல் அதிகாரி தவறாக பேசியதாக ட்விட்டரில் புகார் அளித்த இளம் பெண்ணிடம் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பிறகு காவல் துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
காவல்துறையினர் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் அவர், அடிக்கடி சைக்கிளில் பயணம் செய்வது மற்றும் காவல் நிலையங்களில் திடீர் விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இளம் பெண் புகார்
இந்நிலையில் இரவு நேரத்தில் கடற்கரைக்குச் சென்ற பெண்ணிடம் தவறாக பேசியதாக டுவிட்டரில் புகார் அளித்த இளம்பெண்ணிடம் டிஜிபி சைலேந்திரபாபு மன்னிப்பு கேட்டு உள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுமிதா பைத்யா என்ற இளம்பெண் நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையில் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

தவறாய் பேசிய அதிகாரி
இரவு 10 மணிக்கு மேல் சுற்றி திரிய வேண்டும் என்றால் வட இந்தியாவில் சுற்றித்திரியுங்கள் என பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரை தனது வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றதாகவும், தன்னை ஒரு குற்றவாளி போல் அவர் நடத்தியதாகவும், அலுவலக நேரம் முடிந்ததும் நானும் எனது நண்பரும் அங்கு அனைத்து கண்ணியத்துடனும் நடத்தையுடனும் அமர்ந்திருந்தோம்.கடற்கரையின் நேரத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று கூறியும் அவர் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.

ட்விட்டரில் புகார்
இது குறித்து தனதூ ட்விட்டர் பக்கத்தில் தமிழக காவல்துறையை டேக் செய்து பதிவிட்ட மதுமிதா, 10 மணிக்குப் பிறகு வட இந்தியாவில் சுற்றித் திரியுங்கள்" என்று அவர் சொன்னது மிகவும் அவமரியாதை விஷயம். வடகிழக்கு மாநிலத்தவராக இருப்பதால் நான் எப்படி வட இந்தியன் என்று குறியிடப்படுகிறேன்??" எனவும், "கடற்கரையில் உட்காரும் நேரம் குறித்து எந்த அறிவிப்பும் எங்களுக்கு தெரியாது. தயவு செய்து அவர்களுக்கு நல்ல முறையில் நடந்துகொள்ள பயிற்சி கொடுங்கள்.நான் குற்றவாளி அல்ல" என பதிவிட்டிருந்தார்.

மன்னிப்பு கேட்ட டிஜிபி
மதுமிதாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் மதுமிதாவின் குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் "பணியில் இருந்த அந்த காவல்துறை அதிகாரியின் முரட்டுத்தனமான மற்றும் பொறுப்பற்ற நடத்தைக்காக நான் வருந்துகிறேன். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிபி தமிழ்நாடு, திரு. சைலேந்திர பாபு ஐபிஎஸ்." என பதிவிடப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications