உண்மையிலேயே "அவர்"தான் காரணமா.. சுந்தர் சி.யோடு டெல்லிக்கு போய் அந்தர் பல்டி அடித்த குஷ்பு!
தமிழக காங்கிரஸ் கட்சி குஷ்புவை தவறவிட்டுவிட்டது
சென்னை: சுந்தர்.சி தந்த பண நெருக்கடியால்தான், காங்கிரஸை விட்டு குஷ்பு போனதாக காங்கிரஸ் கட்சி ஒரு பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளது. இது ஏற்புடையதுதானா? என்ற கருத்து எழுந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது.. சுந்தர்.சி தமிழக பாஜக தலைவர் எல். முருகனை ரகசியமாக சந்தித்து பேசிவிட்டு வந்ததாக சொல்லப்பட்டது.. பிறகு ஜே.பி.நட்டாவை சந்திக்க இருப்பதாகவும் தகவல் கசிந்தது.
அப்போதே குஷ்பு பாஜகவில் இணைவது குறித்த செய்தி பலமாக அடிபட்டது.. அரசியலில் இத்தனை வருஷமாக இருக்கும் தன்னை எந்த கட்சியும் பயன்படுத்தி கொள்ளாத நிலையில், நட்டாவிடம் ஏதாவது முக்கிய பொறுப்பினை கேட்கலாம் என்றும், அல்லது வரப்போகிற தேர்தலில் சீட் கேட்கலாம் என்றும் அனுமானிக்கப்பட்டது.
"லூசு பசங்களா".. நம்பவே முடியலை.. நம்ம குஷ்புவா இது... கடைசில இவரும் பச்சையா பொய் சொல்லிட்டாரே!
குஷ்பு
இவ்வளவு விஷயம் கசிந்த பிறகும், காங்கிரஸ் தரப்பு வாய் திறக்கவே இல்லை.. குஷ்புவின் அதிருப்தி குறித்தும் எந்த கருத்தையும் சொல்லவில்லை. குறைந்தபட்சம் குஷ்புவை அணுகி, என்ன பிரச்சினை என்று கூட கேட்டதாக தெரியவில்லை. அவரை சமாதானப்படுத்தக் கூட காங்கிரஸ் முயற்சித்ததாக தெரியவில்லை. போனால் போகட்டும் என்ற அலட்சிய மனோபாவம்தான் காங்கிரஸ் தரப்பில் இருந்ததாக தெரிகிறது.
ஆச்சரியம்
ஆனால், இன்று காங்கிரஸுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத சுந்தர்சியை உள்ளே கொண்டு வைத்து குற்றவாளியாக்குகிறது காங்கிரஸ்.. இது ஆச்சரியமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கோபண்ணா, "குஷ்பு கொஞ்ச காலமாகவே கட்சியின் செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்து காணப்பட்டார்... ஷூட்டிங்கிலும் பிசியாக இருந்தார்... நாங்க அழைக்கும்போதுகூட, வெளிநாடுகளில் ஷூட்டிங்கில் இருப்பதாகவே தகவல்கள் வந்தன.. இப்போது சுந்தர் சி.தான் குஷ்பூவை பாஜகவில் இணைய வைத்திருக்கிறார்... சொல்லபோனால், அவரது அழுத்தத்தின் பேரிலேயே குஷ்பு பாஜகவில் இணைய முடிவெடுத்திருக்கக் கூடும்" என்றார்.
கோபண்ணா
ஒருவேளை கோபண்ணா சொன்னது உண்மையாகவே கூட வைத்து கொண்டாலும், அப்படியானால் காங்கிரஸ் சரியாகத்தான் இருக்கிறதா? கட்சிக்கு நம்பி வரும் பிரமுகர்களை சரியாகத்தான் பயன்படுத்தி கொண்டு வருகிறதா? அவர்கள் பக்கம் ஒரு தவறு கூட கிடையாதா? என்ற கேள்விகளும் எழுகிறது.
கவர்ச்சி அரசியல்
தேர்தல் சமயத்தில் மக்களிடம் கவர்ச்சி அரசியல்தான் எடுபடும் என்பதை பாஜக நன்றாக புரிந்துவைத்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காயத்ரி ரகுராம், நமீதா, ஜீவஜோதி என்று அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களையும் உள்ளே இழுத்து போட்டு பொறுப்பையும் தந்து கவுரவித்துள்ளது.
எம்ஜிஆர்
இது எந்த அளவுக்கு பலன் தரும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், தமிழக மக்களை பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கவர்ச்சி அரசியலுக்கென்று ஒரு ஈர்ப்பு இருந்து வரத்தான் செய்கிறது.. அதனால்தான், புதிதாக அரசியல் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும்கூட அவர்களுக்கு பொறுப்பு தந்து அழகு பார்க்கிறது பாஜக... இது ஒரு வகையில் அரசியல் யுக்திதான்.. ஓட்டுக்களை திசை திருப்பும் ஒரு வியூகம்தான்.. இந்த இடத்தில்தான் காங்கிரஸ் கோட்டை விட்டுவிட்டது.
சினிமாக்காரர்கள்
திமுக கூட இதுபோன்ற அரசியலை செய்துள்ளது. பல சினிமாக்காரர்கள் திமுகவில் உள்ளனர். குஷ்பு கூட ஆரம்பத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகவே இருந்தாரே.. அதெல்லாம் காங்கிரஸுக்குஏன் புரிவதில்லை... புதிதாக யாரையும் சேர்க்காவிட்டாலும் கூடபரவாயில்லை, இருப்பவர்களைக் கூட தக்க வைக்க முடியாது என்றால் நிச்சயம் ராகுல் காந்தி சாட்டையை கையில் எடுத்தாக வேண்டும்.
பாஜகவின் வியூகம்
பல கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கும் காங்கிரசுக்கு, தேர்தலை சந்திக்க வேண்டிய நெருக்கடி உள்ளது.. திமுகவுடன் எந்த அளவுக்கு இணக்கம் உள்ளது, சீட் அவர்கள் எவ்வளவு தருவார்கள் என்பதெல்லாம் தெரியாத நிலையில், குஷ்பு போன்றவர்களை சமாதானப்படுத்தி தங்கள் பக்கம் இழுத்து பிடித்து வைத்திருக்க வேண்டும்.. அதுமட்டுமல்ல, குஷ்பு விவகாரம் நேற்று அறிவித்து, இன்று பாஜகவில் சேரவில்லை.. சில மாதங்களாகவே இந்த பிரச்சனை வெடித்து வரும் நிலையில், நிறைய சாதகமான விஷயங்களை காங்கிரஸ் செய்திருக்கலாம்.
குழப்பம்
சுந்தர் சி, எல்.முருகனை சந்தித்தாக செய்தி வரவும், இன்று அவர் மீது ஒட்டுமொத்த பழியையும் காங்கிரஸ் தூற்றினாலும், உண்மை தன்மை என்ன என்பதை காங்கிரஸ் நிச்சயம் அறியும்.. அந்தவகையில், இனியாகிலும் தங்களை பலப்படுத்தி கொள்ளும் நெருக்கடி ஒரு தேசிய கட்சிக்கு இன்று எழுந்துள்ளது.. போற வரைக்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, போன பிறகு, இவர்தான் காரணம் அவர்தான் காரணம் என்று அடுத்தவர் மீது பழியைப் போடுவது என்பது முட்டாள்தனமானது. மாறாக போகாமல் தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமானது.. இதைப் புரிந்து கொண்டவர்கள் பிஸ்தா.. புரியாமல் இருப்பவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.