ஆளுநர் ரவி இடமாற்றம் செய்யப்பட்டது திமுகவிற்கு நிச்சயம் சவாலானது.. அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன?
ஆர்.என். ரவி கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழகத்தின் 26-வது ஆளுநராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக அவர் நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றினார். கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்து வந்தார் ஆர்.என்.ரவி. அவர் தற்போது தமிழ்நாட்டில் இருந்து மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஒரு வகையில் இழப்பு என்று திமுக கிண்டல் செய்து வருகிறது. ஆனால் ஆளுநர் ரவி இடமாற்றம் செய்யப்பட்டது திமுகவிற்கு நிச்சயம் சவாலானது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

"பொது எதிரி" என்ற அரசியல் வியூகம்
திமுகவிற்கு மாநில சுயாட்சி பற்றிப் பேசும்போது ஒரு "எதிர்ப்பு பிம்பம்" தேவை இருக்கிறது. ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் சனாதனம், திராவிடம் மற்றும் பல்கலைக்கழக நியமனங்கள் குறித்துப் பேசிய போதெல்லாம், திமுக அதை "தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாடு" என மடைமாற்றி, தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், மக்களை ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தியது. இப்போது அவர் இல்லாதது அந்த அரசியல் அஸ்திரத்தை சற்று மழுங்கடிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உணர்ச்சிகரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி
ஆர்.என். ரவி அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால், திமுக அரசால் பல நேரங்களில் ஆளுநர் மாளிகையை நோக்கிப் போராட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. இது மக்களிடையே "ஆளுநர் இடையூறு செய்கிறார்" என்ற அனுதாபத்தை திமுகவிற்குத் தேடித்தந்தது. புதிய ஆளுநர் அமைதியான முறையில் செயல்பட்டால், திமுக அரசு தனது ஆட்சி நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை மட்டுமே நேரடியாகச் சந்திக்க வேண்டிய நிலை இருக்கும்.
நிர்வாக ரீதியான பலன் (திமுகவிற்கு சாதகம்)
மறுபுறம், ஆளுநர் மாற்றப்படுவது நிர்வாக ரீதியாக திமுகவிற்குப் பெரிய நிம்மதியைத் தந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏனெனில் நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்களுக்கு (உதாரணமாக, நீட் எதிர்ப்பு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்) புதிய ஆளுநர் மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பு கிடைக்கலாம்.. அதேபோல் முன்பு ஆளுநர் மாளிகைக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையே இருந்த பனிப்போர் இருந்தது. இனி அது குறைந்தால், அரசு தனது திட்டங்களை வேகப்படுத்த முடியும்.
மேற்கு வங்க மாற்றம் முக்கியமானது
ஆளுநர் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டிருப்பது, அங்குள்ள மம்தா பானர்ஜி அரசுக்கும் பாஜகவிற்கும் இடையிலான மோதலைக் கருத்தில் கொண்டே இருக்கலாம் என்கிறார்கள். இது தேசிய அளவில் பாஜகவின் வியூகம். தமிழ்நாட்டிற்கு வரும் புதிய ஆளுநர் எப்படிப்பட்டவர் என்பதைப் பொறுத்தே இது திமுகவிற்கு இழப்பா அல்லது லாபமா என்பது உறுதியாகும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்..












Click it and Unblock the Notifications