சென்னையில் வீடியோ கால் மூலம் மன்னிப்பு.. காதலியிடம் கெத்து.. கடைசியில் ஒரே அசிங்கமா போச்சு குமாரு
சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில், கோபம் அடைந்த ரவுடி, இளைஞரை வீடியோ கால் மூலம் மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை சினிமா பாணியில் கெத்துக்காக காதலிக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கடைசியில் ஒரே அசிங்கமா போச்சு குமாரு கதையாக சம்பவம் நடந்திருக்கிறது.
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் வெங்கடேஷ் என்ற சுருட்டை வெங்கடேஷ். இவர் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. எண்ணூர் பகுதியான ரவுடியான சுருட்டை வெங்கடேஷ், அந்த பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை, காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரிஷி கண்ணனிடம் விற்பனை செய்ய கொடுத்தாராம்.

ஆனால், ரிஷி கண்ணன் கஞ்சா விற்பனை செய்த பணத்தில் ரூ.20 ஆயிரத்தை மட்டும் வெங்கடேஷிடம் கொடுத்து விட்டு மீதம் ரூ.2 ஆயிரத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தாராம். இதுபற்றி ரவுடி வெங்கடேஷ் கேட்டபோது, "சகோதரா உன்னுடைய சரக்கு சரியில்லை. போதை ஏறவே மாட்டீங்குது என்று வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள்" என்று கிண்டல் செய்தாராம்
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை ரிஷி கண்ணன் வீட்டுக்கு அனுப்பி உள்ளாராம். அவர்கள் ரிஷி கண்ணனை கத்தியால் கைகளில் வெட்டியுள்ளார்கள். ரத்தம் சொட்ட அவரை மிரட்டி மண்டியிட வைத்ததுடன், பின்னர் வீடியோ கால் மூலம் ரவுடி வெங்கடேஷிடம் மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள்.
ரிஷி கண்ணனை தாக்கும் இந்த வீடியோவை அந்த ரவுடி கும்பலை சேர்ந்த வருண் என்பவர் காசிமேடு பகுதியைச் சேர்ந்த தனது காதலிக்கு அனுப்பி உள்ளார். இதனிடையே வருணின் காதலியை அவரது தோழிகள், "உன் காதலன் ஒல்லியாக இருக்கிறான்.. இவன் எல்லாம் ரவுடியா?" என கேலி செய்து வந்துள்ளார்கள். இதனால் ரவுடி வருண், அந்த வீடியோவை தனது காதலிக்கு அனுப்பி சினிமா பாணியில் தனது 'கெத்தை' காட்டியிருக்கிறார்.
ஆனால் செய்த சம்பத்தை பாதிக்கப்பட்ட ரிஷி கண்ணா உள்ளிட்ட யாரும் வெளியில் சொல்லாத நிலையில், அவரது காதலி, அந்த வீடியோவை 'இன்ஸ்டாகிராம்' மூலம் தோழிகளிடம் கெத்துக்காக பரப்பினார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த வீடியோ போலீசாரின் கண்ணிலும் பட்டது. திருவொற்றியூர் தனிப்படை போலீசார் ரவுடி வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் இதில் தலைமறைவாக உள்ள ரிஷி கண்ணன், வருண் உள்பட கத்தியால் வெட்டிய 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். சினிமா பாணில் கெத்து காட்ட நினைத்த ரவுடி கும்பலின் கூட்டாளியும், அவரது காதலியும் செய்த வேலை.. கடைசியில் ஒரே அசிங்கமா போச்சு குமாரு பாணியில் அவர்களுக்கே சிக்கலாக முடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications