நான் முதல்வன் திட்டத்தால் வேலைவாய்ப்பு பெறும் தமிழக இளைஞர்கள்! எப்படி சாத்தியம்?
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.
கடந்த 2002-2023ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி சாத்தியம்? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

நான் முதல்வன் திட்டம் என்பது முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை கல்வியில், அறிவில், ஆற்றலில், தனித்திறமைகளில் தலைநிமிர்ந்து நிற்க வைக்க தொடங்கப்பட்ட திட்டமாக நான் முதல்வன் திட்டம் திகழ்கிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நான் முதல்வன்" திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் இணையதளமானது, வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் "நான் முதல்வன்" இணையதளம் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் 3,50,000 மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கலை அறிவியல் கல்லூரிகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்குரிய திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பட்டப்படிப்புடன் சேர்த்து திறன்களையும் மாணவர்களுக்கு வளர்த்துவிடுவால் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் திட்டமாக நான் முதல்வன் திட்டம் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications