“அடி வயிற்றுல சொருகிடுவேன், மூணு மாசத்துல நீ தொலஞ்சடா” டாக்டரின் கொலை மிரட்டல்.. மந்தகதியில் போலீஸ்
சென்னை: ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்த அரசு டாக்டர் மீது ஆடியோ ஆதாரங்களுடன் கொடுத்த புகாருக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, 2 ஆண்டுகள் ஆகியும் காவல்துறை தேவைப்படும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார் சமூக செயற்பாட்டாளர் காசிமாயன்.
கீழ்த்தரமாக பேசி, தொடர்ந்து அவமானப்படுத்தியதோடு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டி, அரசு கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை டாக்டர் பாலாஜியை மிகக்கொடூரமாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், சமூக செயற்பாட்டாளரை ஒரு அரசு டாக்டரே கொலை மிரட்டல் விடுத்ததற்கான பின்னணி காரணம் என்ன? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? என்று காசிமாயனிடமே கேட்டோம்...

"தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலராக (Designated Officer) பணிபுரிந்தவர் அரசு டாக்டர் நவநீதன். அப்போது, சக பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுநல நோக்கத்துடன் உணவு பாதுகாப்புத்துறை ஆணையரிடம் புகார் அளித்தேன்.
இதனைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அந்த விசாரணையில் அவர் மீதான புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டது. இதனால், உணவு பாதுகாப்புத்துறையிலிருந்து அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு மாற்றப்பட்டார். இதனால், அவருக்கு என் மீது கோபம் ஏற்பட்டது.
இந்த நிலையில், திடீரென ஒருநாள் புதிய எண்ணிலிருந்து ஃபோன் கால் வந்தது. அப்போது, என்னை மிகவும் ஆபாசமாகவும் அருவறுக்கத்தக்க வார்த்தைகளுடனும் பேசியதோடு, 'மூணு மாசத்துல நீ தொலைஞ்ச... அடிவயிற்றுலேயே சொருகிடுவேன்டா' என ஆக்ரோஷமாக பேசி கொலைமிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டல் ஆடியோவை வைத்து சென்னை திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். காவல்துறையின் விசாரணையில் என்னை மிரட்டியவர் அரசு டாக்டர் நவநீதன் என்பது தெரியவந்தது. அதுவும், என்னை மிரட்டுவதற்காகவே ஒரு செவிலியரின் பெயரில் சிம்கார்டு வாங்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. IPC -294 (b) ஆபாசமாக பேசுதல், IPC-506 (1) கொலை மிரட்டல் விடுத்தது என 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இரண்டு வருடங்கள் ஆகியும்கூட அவரை கைது செய்யவில்லை.
பலமுறை காவல்நிலையத்திற்கு அலைந்தும் நடவடிக்கை எடுக்காததால், சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகத்திடம் புகார் அளித்தேன். அதற்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. டாக்டர் நவநீதன் மிரட்டியது உறுதி செய்யப்பட்டதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இப்போதுதான் (25-10-2024) பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவே, 2 வருடங்கள் ஆகிவிட்டன. காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் தெரியவில்லை. டாக்டரை மிரட்டினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் என கடுமையான சட்டங்கள் உள்ளன. அதில் தவறில்லை. டாக்டர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம். அதே அரசு டாக்டர் பொதுமக்களையோ, சமூக செயற்பாட்டாளர்களையோ கொலை மிரட்டல் விடுத்தால் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை தாமதமாகிக்கொண்டிருக்கிறது" என குற்றஞ்சாட்டுகிறார் காசிமாயன்.
இதுகுறித்து, கொலைமிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டாக்டர் நவநீதனை ஒன்இந்தியா சார்பில், தொடர்புகொண்டு கேட்டபோது, "போலீஸார் என்னை விசாரித்தார்கள். நான் முன் ஜாமீன் வாங்கிவிட்டதால் என்னை கைது செய்யவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மேலும் பேசவிரும்பவில்லை" என்று கூறிவிட்டார்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட புகார் என்ன ஆனது? என திருமுல்லைவாயில் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லரிடம் நாம் கேட்டபோது, "நான் இந்த காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்பதற்கு முன் போடப்போட்ட எஃப்.ஐ.ஆர் இது. 2023 ஆண்டிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள். என்னுடைய கவனத்துக்கு தற்போது கொண்டுவந்ததால் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் உறுதியாக.
கோர்ட் முன் ஜாமீன் வழங்கியிருந்தாலும், இந்த வழக்கை அடுத்தகட்டத்திற்கு போலீஸ் மூவ் செய்யாமல் கிடப்பில் போடுகிறது என்பதே மையக் குற்றச்சாட்டாக உள்ளது. வழக்கு விசாரணையை அடுத்தகட்டத்திற்கு போலீஸ் கொண்டு செல்லாமலே இருப்பதன் காரணம் என்ற என்ற கேள்வி எழுகிறது.
டாக்டர்களால் என்பது மட்டுமல்ல, உயர் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இப்படி கொலை மிரட்டல் விடுத்தால் கடுமையான தண்டிக்கவேண்டியது காவல்துறையின் கடமைதானே? சாமானியனுக்கு மட்டும் தனி நீதியா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
-மனோ செளந்தர்.
எப்ஐஆர் காப்பி இதோ:












Click it and Unblock the Notifications