நேற்று இல்லாத மாற்றம்... நம்ம பாலு அண்ணனா இது... டி.ஆர்.பாலு பற்றி புளங்காகிதம் அடையும் திமுகவினர்
சென்னை: திமுக பொருளாளராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பாலுவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அவருக்கு கடந்த 2 நாட்களாக வாழ்த்துக் கூறி வரும் திமுகவினர்.
எப்போதும் சிடு சிடுவென்ற முகத்துடன் கடுகடுப்பு காட்டக்கூடிய பாலு பொருளாளர் பதவி ஏற்றதிலிருந்து பொறுமையின் சிகரமாக மாறிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
பொருளாளர் பதவியேற்றமைக்காக அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் நிர்வாகிகளிடம் கனிவுகாட்டுகிறாராம் டி.ஆர்.பாலு.
பாமக முன்னெடுக்கும் இட ஒதுக்கீடு போராட்டம்.. தைலாபுரம் தோட்டத்திற்கு தூது மேல் தூது விடும் அதிமுக..!
கோபக்காரர்
திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான டி.ஆர்.பாலு எப்போதும் கண்டிப்புடன் நடக்கக்கூடியவர். எந்த ஒரு கட்சிக்காரரும் அவரிடம் எந்தக் காரியத்தையும் உடனடியாக சாதிக்க முடியாது. இதேபோல் யாரும் அவ்வளவு எளிதாக பாலுவுடன் ஒட்டவும் முடியாது. அதற்கு காரணம் அவருக்கு இருக்கும் டென்ஷன் பார்ட்டி என்ற அடைமொழி தான். இதன் காரணமாகவே எ.வ.வேலு, துரைமுருகன் போன்றோருக்கு இருக்கும் ஆதரவாளர்கள் வட்டம் கூட அவருக்கு இல்லாமல் இருந்தது.
மனமாற்றம்
இந்நிலையில் திமுக பொருளாளராக பொறுப்பேற்றதில் இருந்தே பாலுவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதாக கூறுகின்றனர் அவரை நன்கறிந்த திமுகவினர். தன்னை அழைத்து வாழ்த்துக் கூறும் நிர்வாகிகளிடம் பொறுமையாக பேசுவதுடன் கனிவான வார்த்தைகளில் அவர்களை கவரத் தொடங்கி இருக்கிறாராம். மேலும், தன்னை எப்போது வேண்டுமானாலும் அழைத்துப் பேசலாம் என்றும் நிர்வாகிகளுக்கு பூஸ்ட் அளித்து வருகிறாராம்.
ஆச்சரியம்
பொருளாளர் பதவியேற்ற 3 நாட்களில் இப்படியொரு மாற்றமா என திமுக நிர்வாகிகள் பாலுவின் குணாதிசயங்களை பற்றி தங்களுக்குள் விவாதித்துக் கொள்கின்றனர். திமுகவில் அந்தக்கால நிர்வாகிகளுக்கும் இந்தக் கால நிர்வாகிகளுக்கும் நிறைய வேறுபாடு உள்ளதால் வேறுவழியின்றி தனது கோபத்தை பாலு மூட்டை கட்டி வைத்துவிட்டார் என்கிறார் அவரை நன்கறிந்த நிர்வாகி ஒருவர்.
பொதுக்குழு பேச்சு
இதனிடையே திமுக பொதுக்குழுவில் பேசிய கனிமொழி, பொருளாளர் பதவியில் இதற்கு முன் இருந்த துரைமுருகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, சாதிக்பாட்ஷா, எம்.ஜி.ஆர். என பலரும் பொறுமைசாலிகளாக திகழ்ந்தார்கள் என்றும் ஆனால் பாலுவை பொறுத்தவரை சற்று கோபப்படக்கூடியவர் எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்நிலையில் பாலுவின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.