சென்னை கொளத்தூர் ஆர்டிஓ ஆபீஸில் டிரைவிங் லைசென்ஸ் பெற போனால்.. இதுதான் நிலையா?
சென்னை: மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமங்கள் பெறுவதற்கு மற்றும் பழகுனர் உரிமம் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் தற்போதைய நிலையில் சென்னை கொளத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு சுமார் 40 நாட்கள் சர்வ சாதாரணமாக காத்திருக்கும் நிலைமை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 பகுதி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தான் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.), ஓட்டுனர் உரிமம் வழங்குதல், உரிமங்கள் புதுப்பித்தல், வாகனங்களை மறுபதிவு செய்தல், வாகனங்களுக்கு உரிமையாளர் மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், சர்வதேச வாகன உரிமம் வழங்குதல், வாகனங்களை பதிவு செய்தல், வாகனங்களுக்கு உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக சொல்வது என்றால், இருசக்கர வாகனம் மற்றும் கார், மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கு இந்த அலுவலகங்கள் வாயிலாக ஓட்டுனர் உரிமங்கள் (டிரைவிங் லைசென்ஸ்) பெற முடியும். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முதலில் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற்றாக வேண்டியது அவசியம் ஆகும்.

ஆனால் இதுபோன்ற உரிமங்கள் பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இந்த நிலையில், சென்னை ரெட்டேரி 100 அடி சாலையின் அருகில் இயங்கி வரும் கொளத்தூர் ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு சுமார் 40 நாட்களுக்கு மேல் மக்கள் காத்திருக்கும் நிலை இருப்பதாக புகார்கள் எழுந்தது. பொதுவாக கொளத்தூரை பொறுத்தவரை பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற்ற பின்னர் ஒரு மாதத்திற்கு பின்னர் 6 மாத காலத்திற்குள் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், அதற்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்த 'ஆன்-லைன் ஸ்டாட் புக்கிங்' செய்வதற்கு தான் கொளத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மக்கள் சுமார் 40 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளதாக ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இதுபற்றி ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூறுகையில், கொளத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மொத்தம் 3 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இருந்தார்கள். அந்த அலுவலகத்தில் தற்போது ஒரே ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் மட்டுமே இருக்கிறார்கள். மேலும் இந்த அலுவலகத்திற்கு என தனி ஆர்.டி.ஓ. அதிகாரி இல்லை, பொறுப்பு அதிகாரி தான் வாரத்திற்கு 2 நாட்கள் வந்து செல்கிறார். இதனால் தாமதம் ஏற்படுகிறது என்றார்கள். இந்நிலையில் ஓட்டுனர் உரிமம் பெற மக்கள் 40 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அந்த குறைகள் களையப்பட்டு உடனுக்குடன் ஓட்டுனர் உரிமம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உயர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications