ரேஷனில் துவரம் பருப்பு தட்டுப்பாடு.. டெண்டரில் கிளம்பிய புதிய வில்லங்கம்.. அறப்போர் இயக்கம் புகார்
சென்னை: தமிழ்நாடு ரேஷன் துறையில் துவரம் பருப்பு வாங்கும் டெண்டர் போடப்பட்டுள்ளது. கனடியன் மஞ்சள் பருப்பு (candian yellow lentil) வாங்கும் டெண்டரில் அரசுக்கு ரூ 39 கோடி இழப்பு ஏற்பட உள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் சுமார் 2 கோடிக்கும் அதிகமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசி விலையில்லாமலும், சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்றவை மானிய விலையிலும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொதுவினியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு வழங்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொதுவாக ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்றவை வழங்கப்படுவதாவும், பச்சரிசி, பாமாயில், துவரம்பருப்பு போன்றவை உடனே வழங்கப்படுவது இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். போய் அடுத்த வாரம் வாருங்கள் என்று அறிவிப்பது பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நடப்பதாக கிராமப்புறங்களில் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் துவரம் பருப்பு விலை ஒரு கிலோ 170 ரூபாய் ஆக விற்கப்படுகிறது. பாமாயில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. ஆனால் அரசு ரேஷன் கடைகளில் கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் மானிய விலையில் அரசு விற்கிறது. இதன் காரணமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை எப்படியாவது ரேஷன் கடையில் வாங்கி சமாளிக்கலாம் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் கடந்த 3 மாதங்களாகவே ரேஷனில் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை என்று புகார்கள் உள்ளது. குறிப்பாக சொல்வது என்றால் கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் காரணமாக துவரம்பருப்பு விநியோகம் எங்குமே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளதாம். இதுபற்றி விளக்கம் அளித்த அரசு, தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் 20,000 டன் துவரம் பருப்பு, அல்லது கனடா மஞ்சள் பருப்பு , 2 கோடி லிட்டர் பாமாயில் வாங்க கடந்த ஏழாம் தேதி டெண்டர் கோரியது.
அதில் கிலோ துவரம் பருப்புக்கு குறைந்த விலையாக 189 ரூபாய், இறக்குமதி துவரம் பருப்புக்கு 179 ரூபாய், கனடா பருப்புக்கு 165 என டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் விலை புள்ளி வழங்கி இருக்கின்றன .வெளிச்சந்தையில் தற்போது துவரம் பருப்பு விலை 170 ரூபாயாகவும் கனடா பருப்பு விலை 130 ரூபாய் ஆகவும் இருக்கிறது. இதனால் கனடா பருப்பை அதிக விலைக்கு வாங்க அனுமதிக்ககூடாது என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன.
இதுபற்றி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு கிலோ ரூ 120 முதல் 130 வரை கிடைக்ககூடிய கனடியன் மஞ்சள் பருப்பை ரூ 160 க்கு 13000 டன் வாங்க ரேஷன் துறை முடிவு செய்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் இதில் சிண்டிகேட் அமைத்து அதிக விலை கொடுத்துள்ள விவரங்களையும் சந்தை மதிப்பிற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு புகாராக தெரிவித்துள்ளோம். உடனடியாக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்த உறுதி ஆணையை ரத்து செய்து, ஒப்பந்தம் போடாமல் நிறுத்தி, இந்த ஊழல் முறைகேடு தடுக்கப்பட்டு, ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .












Click it and Unblock the Notifications