"அரசியல் எல்லாம் இல்லை! மனிதாபிமானமே முதன்மை!" 6 பேர் விடுதலை.. திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பளீச்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சிறையில் இருந்தவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக திமுகவின் டிகேஎல் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்காகத் தமிழகம் வந்திருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தனர்.

ராஜீவ் கொலை வழக்கு
கடந்த மே மாதம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தது. இதற்கிடையே பேரறிவாளனைப் போலவே தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மற்ற ஆறு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

விடுதலை
இதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே இதர 6 பேருக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

கோரிக்கைகளில் ஒன்று
இது தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், "இது எங்கள் கோரிக்கைகளில் ஒன்று. சுமார் 30 ஆண்டுகளாக அவர்கள் சிறைகளில் வாடி வருகின்றனர் என்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என நாங்கள் ஆளுநருக்குப் பரிந்துரை செய்தோம். ஏனென்றால் இது ஆளுநர் அதிகார வரம்புக்கு உட்பட்டது. ஆனால், ஆளுநர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நாங்கள் நீதிமன்றம் சென்றோம்.

அரசுக்கு கிடைத்த வெற்றி
ஆளுநரின் காலதாமதத்தைக் காரணம் காட்டி இப்போது இவர்கள் ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இது திமுக பல காலமாகச் சொல்லி வரும் ஒன்று தான். இந்த தீர்ப்பு தமிழக அரசுக்குக் கிடைத்த வெற்றி. ஆறு பேரின் விடுதலையைத் தடுத்தது அரசு தானே தவிரத் தமிழக அரசு இல்லை. அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் செய்யவில்லை என்பதால் நீதிமன்றம் இப்போது அவர்களை விடுவித்து உள்ளது தமிழக அரசின் வெற்றி தான்.

அரசியல் பார்க்கக் கூடாது
சுமார் 30 ஆண்டுகளுக்காக அவர்களைச் சிறையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் பார்க்கக் கூடாது. மனிதாபிமான நோக்கில் தான் இதைப் பார்க்க வேண்டும். இளம் பருவத்தில் தொடங்கி முதுமை வரை அவர்கள் சிறையில் இருந்து உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் அரசியல் பார்க்க எதுவும் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் தான் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications