டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் கிடையாது.. சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு
சென்னை: அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனிடையே சில மருத்துவர்களை வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்தது. அந்த பணியிட மாற்றத்தையும் சுகாதாரத்துறை திரும்ப பெறாது என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 25ம் தேதி தொடங்கி தொடர் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் ஆகியவற்றை தமிழக அரசு மருத்துவர்கள் நடத்தினர்.

அமைச்சர் கோரிக்கை
இதனால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்ற நோயாளிகள் அவதி அடைந்தனர். இதையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

அரசு எச்சரிக்கை
ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்த மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கு எதிராக பணிமுறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. அதன் ஒரு பகுதியாக 60 மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்தது. இதையடுத்து தங்களது போராட்டங்களை தற்காலிகமாக திரும்ப பெறுவதாக 7 நாட்களுக்கு பின்னர் மருத்துவர்கள் அறிவித்தனர்.

பணியிட மாற்றம்
இதையடுத்து மருத்துவர்களுக்கு எதிரான பணி முறிவு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். அதேநேரம் பணியிட மாற்றத்தை திரும்ப பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

7 நாட்கள் சம்பளம்
இந்நிலையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த 7 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்ட காலத்தின் போது பணிக்கு வராத மருத்துவர்களை கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு எதிரான தகவல்கள் திரட்டப்படுகிறது. அதன்படி வேலைக்கு வராத நாட்களுக்கு மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அதிகாரிகள் கூறினர்.

திரும்பபெறாது
இதனிடையே சில மருத்துவர்களை வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்தது. அந்த பணியிட மாற்றத்தையும் சுகாதாரத்துறை திரும்ப பெறாது என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications