எங்க பக்கம் தப்பில்லை.. வீடியோவால் விஷயம் பெரிசாயிடுச்சு.. செல்போன் எரிப்பு விவகாரத்தில் விளக்கம்
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் வாடிக்கையாளர் ஒருவர், தான் வாங்கிய புதிய செல்போன் ரிப்பேரானதால் வாங்கிய கடை முன்பே போட்டு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட செல்போன் விற்பனை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தாம்பரம் அருகிலுள்ள கடப்பேரியில் வசிப்பவர் தலைமலை. இவரது மகன் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால், மகிழ்ச்சி அடைந்த அவர் தனது மகனுக்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.

இதன்படி குரோம்பேட்டையில் உள்ள பிரபல செல்போன் கடையில் ரூ. 14,000 மதிப்புள்ள செல்போனை தலைமலை வாங்கினார். போனை வாங்கிய பின்னர், அதில் சிம் போட்டவுடன் போன் ஆன் ஆகவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த தலைமலை, போன் வாங்கிய கடைக்கே சென்று இதுபற்றி கூறினார். ஆனால் அதற்கு கடை ஊழியர்கள் செல்போன் நீங்கள் வாங்கி சென்ற போது நன்றாக தான் இருந்தது.
எனவே நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு தான் இதை எடுத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் தனக்கு வேறு புதிய போனை மாற்றி தரும்படி தலமைலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடைசி வரை ஊழியர்கள் முடியாது என மறுத்ததால், கடுப்பான தலைமலை தான் வாங்கிய செல்போன் கடையின் முன்பே போட்டு பெட்ரொல் ஊற்றி எரித்தார்.
இச்சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், வைரல் வீடியோவாக மாறியது. இச்சம்பவம் குறித்து தற்போது விளக்கமளித்துள்ள சம்பந்தப்பட்ட மொபைல் போன் விற்பனையகம், தலைமலை மொபைலை கொண்டு வந்த போது அது உடைந்து இருந்தது.
பழுதடைந்த போனையே நாங்கள் சரிபார்த்து தருகிறோம் என எவ்வளவோ சொல்லியும், அவர் புதிய மொபைல் தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். அதற்கு வாய்ப்பில்லை என கூறியபோது மொபைலை எங்கள் கடைமுன்பே வைத்து எரித்துள்ளார்.
மேலும் மீடியாக்கள் மூலம் இவ்விவகாரத்தையும் பெரிதுபடுத்திவிட்டார். எங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என மொபைல் விற்பனையகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications