ஈகோவா? எங்களுக்கா? நோ! நோ! துணை நிலை ஆளுநருக்கும் அதிகாரம் இருக்குங்க - தமிழிசை தடாலடி
சென்னை: புதுச்சேரி மக்களுக்காக முதலமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் தங்களுக்குள் ஈகோ பிரச்சனையை உருவாக்க முடியாது
எனவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் ஆள தகுதி இல்லாதவர்கள் பதவி விலகிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாராயணசாமி குற்றச்சாட்டு
"புதுச்சேரியின் சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர்களாக அனைத்து அமைச்சர்களும் உள்ளார்கள். ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் என்.ஆர்.காங்கிரஸ் அரசில் அதிகரித்து உள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள். மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக அவர் இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்." என்றார்.

தமிழிசை பேட்டி
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனிடம், நாராணசாமியின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என பேசிய பாரதியாரின் மண் புதுச்சேரி. புதுச்சேரியில் உள்ள எல்லாரும் அமைச்சர்கள். புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம்
புதிய மதுபான ஆலை திறப்பது கொள்கை முடிவு. இது பற்றி சம்பந்தப்பட்ட துறையிடம் தான் கேட்க வேண்டும். எல்லாம் நேர்மறையாக நடக்கிறது. ஆக்கப்பூர்வமாக நடக்கிறது. எல்லா பள்ளிகளுக்கும் நான் செல்கிறேன். ஆளுநர் வேறு துணை நிலை ஆளுநர் வேறு. துணை நிலை ஆளுநருக்கு சில முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் இருக்கிறது.

ஈகோவை உருவாக்க முடியாது
நானும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் இணைந்து பணியாற்றுகிறோம். நாராயணசாமியால் இணைந்து பணியாற்ற முடியவில்லை. நாங்கள் இணைந்து பணியாற்றுவது அவருக்கு வாட்டுகிறது. ஆதனால் இப்படி பேசிகிறார். இருவருக்கு இடையே ஈகோவை உருவாக்க நினைக்கிறார். எங்கள் இருவர் இடையே ஈகோவை உருவாக்க முடியாது. மக்களுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்.

தமிழ்நாடே எனக்கு உயிர்
நான் அரசு பள்ளிகளுக்கு செல்கிறேன். பல பள்ளிகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக முதலமைச்சரிடம் பள்ளி மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த நான் சொல்கிறேன். இணைந்து பணியாற்றுவதால் அப்படி பேசுகிறார். தமிழகத்திற்கு தமிழ் மகளாக எல்லா நிகழ்ச்சிக்கும் வருவேன். தமிழ்நாடுதான் எனக்கு உயிர் என்பதால் கலந்து கொள்வேன்." என்றார்.












Click it and Unblock the Notifications