நம்ம ஊரு சூப்பரு! விளம்பரப் பேனர் விஷயத்தில் அவதூறு! மறுப்பு கூறுவதில் ஊரக வளர்ச்சித் துறை விறுவிறு!
சென்னை: நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டதில் எந்த தவறும் நிகழவில்லை என ஊரக வளர்ச்சித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ரூ.611க்கு தான் பேனர் அடிக்கப்பட்டதே தவிர ரூ.7,906க்கு எல்லாம் பேனரே அடிக்கவில்லை என மிகத் திடமாக கூறியுள்ளது ஊரக வளர்ச்சித்துறை.
இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கமும் மறுப்பு அறிக்கையும் பின்வருமாறு;

நம்ம ஊரு சூப்பரு
ஊரக பகுதிகளில், ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை 'நம்ம ஊரு சூப்பரு' என்ற "சிறப்பு மக்கள் இயக்கம்" அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தின்போது துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை மற்றும் நெகிழி கழிவு மேலாண்மை, ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்திட முதலமைச்சர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டது.

ஊரக பகுதிகள்
நம்ம ஊரு சூப்பரு" இயக்கம், ஒன்றிய அரசின் "தூய்மையே சேவை" இயக்கத்தோடுஇணைந்து செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது. நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் குப்பைகள் அதிகம் சேகரமாகியிருந்த 47399 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. 21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடி மையங்கள், 45,824 அரசு கட்டிடங்கள், 70,011 சமுதாய சுகாதார வளாகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன.

4.36 இலட்சம் மரக்கன்றுகள்
அதுமட்டுமன்றி 47,949 நீர் நிலைகள், 1,569 கீ.மீ அளவிலான கழிவுநீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக பசுமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு 4.36 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் செலவினங்கள் ஒன்றிய நிதிக்குழு மானியம் அனுமதித்துள்ள வரையறுக்கப்பட்ட நிதியில் இரண்டு சதவீதம் நிர்வாக செலவின தொகுப்பிலிருந்தோ அல்லது பொது நிதியிலிருந்தோ மேற்கொள்ள ஆணையர், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

விளம்பர பதாகைகள்
விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகளின் வாயிலாக அப்பகுதியிலுள்ள அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முற்றிலும் தவறு
மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் (அதாவது 6x4, 12x8, 10x8 அடி) அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். இவற்றிற்கான சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் (சரக்கு மற்றும் சேவைக்கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட, புகாரில் பேனர் ஒன்றுக்கு ரூபாய் 7,906 செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும்.












Click it and Unblock the Notifications