சனாதனம்.. உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன தப்பு.. ஆக்ரோசமாக பேசிய ராமசுப்பிரமணியன்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் பேசியது மிகவும் முக்கியமான விஷயம்.. அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என ஊடக விமர்சகர் ராமசுப்பிரமணியன் கூறினார்.
பிரபல ஊடகம் ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து பேசியது குறித்து விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு ராமசுப்பிரமணியம் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் பேசியது மிகவும் முக்கியமான விஷயம்.. நான் மற்றவர்களை போல் விளக்கம் எல்லாம் கொடுக்க விரும்பவில்லை. பிராக்டிக்கலாக பேசுகிறேன்.. இந்த சனாதனம் விஷயத்தில் அவர் பேசியதை முழுமையாக கேட்டேன்.. வார்த்தைக்கு வார்த்தை பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது.

உதயநிதி சொன்ன பல விஷயங்கள் என்னை பாதித்துள்ளது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், சாதி ரீதியான வேறுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் கூறினார். இப்போது சாதி ரீதியான வேறுபாடுகள் குறைந்திருக்கலாம். ஆனால் இன்னமும் பின்பற்றப்படுகிறது. ஒரு பெண் விதவை என்று ஆகிவிட்டால், மொட்டை அடித்து வெள்ளை உடை உடுத்தனும் எப்படி ஏற்கக்கூடியது என்று இன்றைக்கு நாம் சொல்கிறோம். ஆனால் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் பகுதிகள், திருநெல்வேலி பகுதிகளில் இன்றும் கூட சில இடங்களில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
என் தனிப்பட்ட அனுபவத்தையும் கூறுகிறேன்.. என்னுடைய தந்தையார் இறந்த பிறகு, என் அம்மாவிற்கு வந்த கஷ்டம், எனக்கும் எனது சகோதரிக்கும் தெரியும். உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது. அந்த அநியாயங்கள் எல்லாம் இன்னும் கூட சில இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதை அவர் பேசுகிறார். வெள்ளை உடை உடுத்துவது, மொட்டை அடிப்பது இதெல்லாம் எப்படி நியாயம் என்று கேட்கிறார். நான் வந்து சனாதனம்,இந்து அப்படீன்றதை பற்றி பேசவில்லை.. அவர் (உதயநிதி) வந்து ஒரு வார்த்தை கூட இந்து மதத்தை பற்றி பேசவே இல்லை.ஆனால் வட இந்தியாவில் இந்துக்கள் இனப்படுகொலை என உதயநிதி பேசியதாக பரவுவதே வதந்தி. காங்கிரஸ் முக்த் பாரத் என்று பாஜக சொல்வதற்கு, காங்கிரஸ் காரர்களை ஒழிக்க வேண்டும் என்று அர்த்தமா? என்று உதயநிதி கேட்கிறார்.
அதற்கு அதிமுக எந்த விளக்கமும் கூட கொடுக்கவில்லை. அதற்குள் நான் போகவிரும்பவில்லை.. அதேநேரம் பெண்கள் படிப்பதை பற்றி பேச விரும்புகிறேன். என் சகோதரி நன்றாக படிப்பாள்.. ஆனால் வயதுக்கு வந்த பின், அவளை படிக்க அனுப்பவில்லை அதற்கு பதில் கல்யாணம் செய்து வைத்தார்கள்.இந்த அக்கிரமம் இன்னமும் கூட தொடர்கிறது.
இந்த மாதிரி விஷயங்களை உதயநிதி பேசியதில் என்ன தான் தவறு இருக்கிறது. அவர் இந்து மதம் என்று ஒரு வார்த்தை பேசினாரா, சனாதானத்தில் இந்த மாதிரியெல்லாம் பிராக்டீஸ் இருக்கு என்று தான் பேசினார். அவற்றை தான் ஒழிக்க வேண்டும் என்றார் என பத்திரிக்கை விமர்சகர் ராமசுப்பிரமணியன் கூறினார்.
மேலும் முதல்வர் ஸ்டாலினின் காலை உணவு திட்டத்தை பாராட்டிய ராமசுப்பிரமணியன், ஆனால் அந்த திட்டத்தை கேவலப்படுத்தி,கொச்சை படுத்தி எழுதினார்கள் என்றும் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications