ஒரு வார்த்தைகூட சொல்லல! உங்கள் பொக்கிஷத்தை அபகரிக்கலாம்! எஞ்சாயி எஞ்சாமி சர்ச்சை! அறிவு பதிலடி
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் எஞ்சாமி பாடப்பட்டும் தெருக்குரல் அறிவு இல்லாமல் இருந்தது சர்ச்சையாகி இருந்த நிலையில், இது தொடர்பாக அவரே முக்கிய விளக்கம் அளித்துள்ளார்
Recommended Video
கடந்த ஆண்டு வெளியாகி சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல் "எஞ்சாமி எஞ்சாமி!" தெருக்குரல் அறிவு மற்றும் பாடகர் தீ ஆகியோர் இந்த பாடலை பாடி இருந்தனர்.
இந்த ஒட்டுமொத்த பாடலையும் எழுதியவர் தெருக்குரல் அறிவு தான். மேலும் பாட்டியின் குரலிலும் இந்த பாடலில் அப்படியே பாடி அசத்தி இருப்பார்.

என்ஜாயி எஞ்சாமி
இந்தப் பாடல் வெளியான உடனேயே சர்வதேச அளவில் ஹிட் அடித்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக "எஞ்சாமி எஞ்சாமி" பாடல் ஆனது. இருப்பினும், இதற்கான புகழ் அனைத்தும் பாடலை எழுதி, பாடிய தெருக்குரல் அறிவுக்குச் சென்றதா என்றால் இல்லை தான். ரோலிங்ஸ்டோன் என்ற இதழ் என்ஜாயி எஞ்சாமி பாடல் தொடர்பாக அட்டைப்படக் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

ரோலிங்ஸ்டோன்
அதில் தெருக்குரல் அறிவின் படம் இல்லாமல், பாடகி தீ மற்றும் ரேப்பர் ஷான் வின்சென்ட் டி ஆகியரின் படம் மட்டுமே இடம் பெற்று இருந்தது. எஞ்சாமி பாடலின் முதுகெலும்பான அறிவின் படத்தை எப்படிப் போடாமல் இருக்கலாம் என மிகப் பெரிய அளவில் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரத்தில் பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் தான் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்பது தனிக்கதை!

செஸ் ஒலிம்பியாட்
இணையத்தில் பலரும் ரோலிங்ஸ்டோன் இதழுக்கு கடும் கண்டங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து டிஜிட்டல் பதிப்பில் அறிவின் படத்தை இடம் பெறச் செய்தது. ஆனாலும் கூட ரோலிங்ஸ்டோன் இதழின் செயல்பாட்டைப் பலரும் ஏற்கவில்லை. இந்தச் சூழலில் மீண்டும் எஞ்சாமி பாடல் தொடர்பாகச் சர்ச்சை ஏற்பட்டது. கடந்த வாரம் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் என்ஜாயி எஞ்சாமி பாடல் பாடப்பட்டது.

அறிவு இல்லை
பாடகர் தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் இந்த பாடலை பாடினர். இருப்பினும், தெருக்குரல் அறிவு மேடையில் இடம் பெற்று இந்த பாடலை பாடவில்லை. பாடலின் முதுகெலும்பாக இருந்தவரே மேடையில் இடம்பெறாதது சர்ச்சையானது. நெட்டிசன்களும் கூட இந்தச் சம்பவத்தைக் கவனிக்கத் தவறவில்லை. இது குறித்த விமர்சனங்களும் கூட எழுந்தன. இருப்பினும், அவர் ஏன் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

சர்ச்சை
தொடக்க விழா முடிந்தது முதலே இந்த சர்ச்சை பெரிதாகிக் கொண்டே போனது. தெருக்குரல் அறிவு இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு கருத்தும் கூறாமலேயே இருந்தார். இந்தச் சூழலில் அறிவு இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்து உள்ளார். உறங்கிக் கொண்டு இருக்கும்போது, நமது பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

யாரும் டியூன் கூட தரவில்லை
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என்ஜாயி எஞ்சாமி பாடலை நான் இசையமைத்து, எழுதி, பாடிய பாடல்.. இந்தப் பாடலை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையைக் கூட கொடுக்கவில்லை. இந்த பாடலுக்காக சுமார் 6 மாதங்கள் தூக்கமில்லாமல், அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்து உள்ளேன். இது மிகச் சிறந்த ஒரு க்ரூப் வோர்க் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பாடல் அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை.

எங்கள் வரலாறு
ஆனால், இதற்காக இது வள்ளியம்மாளின் சரித்திரம் அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளான என் முன்னோர்களின் வரலாறு இல்லை என்று ஆகாது. எனது ஒவ்வொரு பாடல்களும் தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும். இதுவும் அதுபோன்ற ஒரு பாடல் தான். எங்கள் மண்ணுக்கு 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. அவை முன்னோர்களின் மூச்சு, வலி, வாழ்க்கை, அன்பு, எதிர்ப்பு மற்றும் இருப்பு என அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள்.

பொக்கிஷத்தை அபகரிக்கலாம்
இவை அனைத்தும் அழகான பாடல்களின் மூலம் உங்களிடம் உரையாற்றுகிறது. ஏனென்றால் எங்கள் ரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகள் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை இது. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. ஜெய்பீம். இறுதியில் உண்மை எப்போதும் வெல்லும்!" என்று பதிவிட்டு உள்ளார்.

முக்கியம்
தெருக்குரல் அறிவின் இந்த பதிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடக்க விழாவில் என்ஜாயி பாடலை அறிவு பாடி இருந்தால், அவருக்குச் சர்வதேச அளவில் சிறப்பான ஒரு அறிமுகம் கிடைத்து இருக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். செஸ் ஒலிம்பியாட்டில் எஞ்சாமி பாடப்பட்டும் தெருக்குரல் அறிவு இல்லாமல் இருந்தது சர்ச்சையாகி இருந்த நிலையில், இது தொடர்பாக அவரே அளித்துள்ள விளக்கம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications