50 ஆண்டு கால எதிர்பார்ப்பு... 8 ஆண்டுகால உழைப்பு... நிறைவேறிய ஜெயலலிதாவின் கனவுத் திட்டம்..!
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் கனவுத்திட்டங்களில் ஒன்றான தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்து நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஜெயலலிதா.
இந்நிலையில் ஆயிரக்கணக்கானோர் உழைப்பில் 8 ஆண்டுகாலத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன.

புதிய நீர்த்தேக்கம்
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் அதற்கேற்ப குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உருவாகியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 77 லட்சமாக இருந்த மக்கள் தொகை இன்று ஒரு கோடியை நெருங்கிவிட்டது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், எதிர்காலத்தில் இது போதாது என கருதிய ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் புதிய ஏரி ஒன்றை உருவாக்க விரும்பினார்.

1,500 ஏக்கர் நிலம்
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தேர்வாய்கண்டிகை ஏரியையும் அதற்கு அருகில் உள்ள கண்ணன்கோட்டை ராஜன் ஏரியையும் ஒன்றாக இணைத்து புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணிகள் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. 1,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.380 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா திறப்பு
சென்னை மக்களுக்காக ஜெயலலிதாவால் பார்த்து பார்த்து கொண்டுவரப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று. ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நேரடியாக தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்திற்கே சென்று திறந்து வைத்திருப்பார். இதனிடையே இந்த நீர்த்தேக்கத்தை நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார். தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் மூலம் சென்னை மாநகரின் குடிநீர் தேவை கணிசமாக பூர்த்தி அடையும்.

நிலம் கையகப்படுத்துதல்
நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தாமதத்தால் பணிகள் முடிவடைய திட்டமிட்ட காலத்தை விட கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் சென்னை மக்களின் அரை நூற்றாண்டுகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நீர்த்தேக்கம் திறந்துவைக்கப்படுவது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications