அதிபர் ஆட்சிக்கு சதி- பலிகடாவாகும் அதிமுக! ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் காட்டம்
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக பலிகடா ஆகும் என்றும் அது தெரியாமலே அக்கட்சி ஆதரிப்பதாகவும் விமர்சித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அதிபராக முயற்சிக்கின்றனர் எனவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வாரிசு வாரிசு என்று பேசுகிறார்கள். கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம் இதில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் கொள்கை குடும்பமாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். யார் காலிலும் விழுந்து வளர்ந்த குடும்பம் இல்லை. தவழ்ந்து போய் வளர்ந்த குடும்பம் இல்லை. லட்சிய குடும்பமாக கொள்கை குடும்பமாக உள்ளது.

இதுதான் அண்ணா உருவாக்கிய இயக்கம். இது சிலருக்கு வயிற்று எரிச்சலாக உள்ளது. அவர்கள் பேசுவதை பற்றி எனக்கு கவலை இல்லை. அதேநேரத்தில் இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டு இருக்கும் நிலையை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். எப்படி சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை காப்பாற்றினீர்களோ அதுபோல நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நமது லட்சியமாக நோக்கமாக இருக்க வேண்டும்.
'இந்தியா' என்று சொன்னலே இன்று பலருக்கு பயம் வந்து விட்டது. பாஜகவுக்கு அச்சமே வந்து விட்டது. 'இந்தியா' என்று சொல்வதற்கே அச்சப்படுகிறார்கள். 'இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்களை பார்த்து பயந்து போய் பாஜக நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளது. அதனால்தான் திடீரென்று நாடாளுமன்றத்தை கூட்டியிருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி செயல்படுத்துவது என்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அதிமுக ஆதரித்துள்ளது. அவர்கள் ஆளும் கட்சியாக இருக்கும் போது எதிர்த்தார்கள். இப்போ திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதே அதே அதிமுக ஆதரிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக பலிகடா ஆகும். அது தெரியாமல் அதிமுக ஆதரிக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சதி திட்டத்தை தீட்டி அதிபராக முயற்சிக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறினால் எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. அரசியல் கட்சி நடத்த முடியாது. ஒரே நாடு ஒரே அதிபர் என போய்விடும். நாட்டின் அதிபராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனரே தவிர நாட்டின் நலனை நினைக்கவில்லை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications