சென்னையில் வாடகைக்கு வீடு விடுறீங்களா.. உஷார்.. கற்பனையில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதுப்பா
சென்னை: சென்னையில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாங்கிய பணத்தில் கட்டிய வீட்டை சிலர் நோகாமல் அபேஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். சிலர் வாடகைக்கு எடுத்த வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி செய்கிறார்கள்.. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
சென்னையில் வீடு வாடகைக்கு பார்த்தாலும், ஒத்திக்கு பார்த்தாலும் சரி, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிறுவனங்கள் என்ற பெயரில் ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கிறது. வாடகைக்கு விட்டு சம்பாதித்து தருவதாக சிலர் மோசடியில் ஈடுபடுகிறார்கள்.. சிலர் ஒத்திக்கு வீட்டை வாங்கி அதனை மறுவாடகைக்கும் அல்லது மறுஒத்திக்கும் விட்டு சம்பாதிக்கிறார்கள். கடைசியில் இரண்டு பக்கமும் அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு திரும்பத்தராமல் தவிக்கவிடுகிறார்கள்.

சென்னையில் வாடகைக்கு வீடு விடப்போகிறீர்கள் என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் வாடகை அல்லது ஒத்திக்கு வீடு தேடுவோரும் உரிமையாளர் இவர் தானா என்பதை இபில் மற்றும் ஆதாரை உறுதி செய்யுங்கள்..அதேபோல் நன்கு விசாரித்துவிட்டுத்தான் வர வேண்டும். பல லட்சம் கடன் உள்ள வீட்டை லீசுக்கு வாங்கும் போது, ஒருவேளை அவர் கடனை கட்டாமல் போனால், லீசுக்கு குடியிருப்போர் சிக்கலை சந்திக்க நேரிடலாம்.
அதேபோல் லீசுக்கு போகும் இடத்தில் குறைகளை சரிசெய்வாரா அல்லது பணத்தை திரும்ப தரக்கூடிய நபரா என்பதை அறிந்து செல்ல வேண்டும்.. சரி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் வீடு வைத்துவிட்டு வெளியூரில் வசிப்பவர்கள் வாடகைக்கு வீடு விட்டால் கவனமாக இருக்க வேண்டும்.. இப்படியும் சில மோசடிகள் நடக்கிறது.. அதனை பற்றி பார்ப்போம்.
சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரம், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த 48 வயதாகும் ராம்பிரசாத், தனக்கு சொந்தமான சென்னை மதனந்தபுரம், ராஜேஸ்வரி நகர் சரோஜினி தெருவில் உள்ள வீட்டை, தனியார் நிறுவன மேலாளரான 38 வயதாகும் ஹரிஷ் குமார் என்பவரிடம் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.23,400-க்கு வாடகைக்கு விட்டார். 2 மாதங்களுக்கு பிறகு அவர் வீட்டிற்கு வாடகையே தரவில்லை.
இதனால் ராம்பிரசாத் தனது வீட்டுக்கு சென்றார். அங்கு வேறு ஒருவர் குடியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரணையில், தன்னிடம் வீட்டை வாடகைக்கு எடுத்த ஹரிஷ்குமார், ரூ.10 லட்சத்துக்கு வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடி குறித்து உடனடியாக ராம்பிரசாத் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications