"நான் இந்தி கற்கிறேன்.. 3வது மொழி கற்பது தமிழக மாணவர்களுக்கு நல்லது”.. மகாவிஷ்ணு கருத்தால் சலசலப்பு!
சென்னை: "3வது மொழியாக இந்தி கற்பது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நல்லது" என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி கைதான மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே கடுமையான கருத்து முரண்பாடுகள் நிலவி வரும் சூழலில், பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு, பள்ளிகளில் 3வது மொழி கற்பதை வரவேற்றுப் பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் மூன்றாவது மொழி கற்பது நல்லது, அதிக மொழிகளை கற்பது என்பது அதிக சக்தி பெறலாம் என மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார். திமுக அரசு, மும்மொழிக் கொள்கையை தீவிரமாக எதிர்த்து வரும் சூழலில் மகாவிஷ்ணு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூன்றாவது மொழி - மகாவிஷ்ணு வரவேற்பு
மகாவிஷ்ணு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கட்டாய இந்தி நிச்சயமாக தேவையில்லை, ஆனால் விருப்பத்தேர்வு மூன்றாம் மொழி என்பது தமிழக மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை கூடுதல் மொழியுடன் (இந்தி மட்டுமல்ல, ஏதேனும் ஒரு மொழி) அதிக நம்பிக்கையுடனும், உலகெங்கிலும் வேலை/ வணிக வளங்களுடனும் அணுக மிகவும் பாராட்டத்தக்க திட்டம். அதிக மொழிகளை கற்பது என்பது அதிக சக்தியைக் குறிக்கிறது!
தனிப்பட்ட குறிப்பு: நான் இப்போது ஆன்லைனில் இந்தி கற்கிறேன் (உள்நாட்டு இந்திய சந்தை மற்றும் சாத்தியக்கூறுகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக இருப்பதால், 120+ கோடி மக்கள்தொகையில் பெரிய அளவில் அணுகலைப் பெற இந்தி தெரிந்தால் போதும்)" எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த மகாவிஷ்ணு?
சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் "தன்னை அறிதல்" என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சொற்பொழிவு நடத்தப்பட்டது. இதனை 'பரம்பொருள் பவுண்டேஷன்' என்ற பெயரிலான தனியார் தொண்டு நிறுவத்தைச் சேர்ந்த மகாவிஷ்ணு நடத்தினார்.

அப்போது, நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்றும், உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் எனவும் மாணவிகள் மத்தியில் பேசினார் மகாவிஷ்ணு. தொடர்ந்து மாணவிகள் அனைவரையும் கண்ணை மூட வைத்து இசையை ஒலிக்க விட்டு அவர்களின் மன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சைத் தொடர்ந்தார் விஷ்ணு. அவரது பேச்சில் பல மாணவிகள் உணர்ச்சி வசப்பட்டு அழுதனர்.
பாவம் - புண்ணியம்
போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பொறுத்து இந்த பிறவி கொடுக்கப்பட்டிருக்கிறது என இஷ்டத்துக்குப் பேசினார் மகாவிஷ்ணு. நீ அதிகமாக பாவம் செய்தால் மலத்தில் ஊறும் புழுவாக பிறப்பாய் என்று திருமூலர் திருமந்திரத்தில் எழுதுகிறார் என்றும் கோட் செய்தார்.
அப்போது அங்கிருந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் பள்ளியில் வந்து மறுபிறவி, பாவ புண்ணியம் பற்றி பேசுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பி எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தார். இதனால் அந்த ஆசிரியருக்கும், விஷ்ணுவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று யார் சொன்னது? அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? எனச் சீறினார் மகாவிஷ்ணு.
கொந்தளிப்பு - மகா விஷ்ணு கைது
இந்த வீடியோவை விஷ்ணு தனது சமூக வலை தளத்தில் பதிவிட்ட நிலையில், இதனை பார்த்த கல்வியாளர்களும், பொதுமக்களும் கொந்தளித்தனர். சமூக வலைதளங்களில் மக்கள் இதற்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு, இந்த மகாவிஷ்ணு மீதும், அவரை பேச அழைத்த பள்ளி நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல்கள் வலுத்தன. இதையடுத்து, இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியதுமே மகாவிஷ்ணுவை ஏர்போர்ட்டிலேயே வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.












Click it and Unblock the Notifications