பலே கில்லாடி திருமலை.. ரெண்டு டெக்னிக்கை வைத்து மூதாட்டிகளிடம் நகை திருட்டு!.. விசாரணையில் திடுக்
சென்னை: முதியவர்களின் கவனத்தை திசை திருப்ப இரு நூதன முறைகளை கையாண்டதாக திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருமலை தெரிவித்தார்.
தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து அவர்களிடம் நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
இவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக் தகவல்களை அளித்தார். தனியாக செல்லும் மூதாட்டிகளிடம் மட்டுமே தங்க நகைகளை பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவர் மேலும் விசாரணையில் மூதாட்டிகளை ஏமாற்ற இரு முறைகளை கையாண்டது தெரியவந்தது.
மகாலட்சுமி மாதிரி இருக்க.. குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்யணும்.. பாட்டிகளை குறிவைத்து நகை திருட்டு
முதியவர்கள்
தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளிடம் சென்று பேச்சு கொடுக்கும் திருமலை அருகில் ஒரு நகைக் கடை திறந்துள்ளார்கள். வியாபாரம் அமோகமாக நடக்க உங்களை போன்ற முதியவர்களுக்கு இலவசமாக நகை கொடுக்கிறார்கள். நான் வாங்கித் தருகிறேன் என கூறுவாராம்.
நகை
பின்னர் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று ஏற்கெனவே நீங்கள் நிறைய நகைகளை அணிந்துள்ளீர்கள், இதை பார்த்தால் அவர்கள் புதிய நகைகளை கொடுக்க மாட்டார்கள். நீங்கள் வசதியாகத்தான் இருக்கீங்கன்னு நெனப்பாங்க, அதனால் கழற்றி கொடுங்கள், நீங்கள் இலவச நகை வாங்கியவுடன் கொடுக்கிறேன் என கூறி நகைகளை வாங்கிக் கொண்டு சென்றுவிடுவாராம்.
ஒரு சவரன் நகை
அது போல் பார்க்க மகாலட்சுமியாட்டம் இருக்கீங்க. எங்கள் உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள், நீங்கள் ஆசிர்வாதம் செய்தால் குழந்தை நன்றாக இருக்கும். என் உறவினர் பணக்காரர், அவர் மனம் குளிரும்படி வாழ்த்தினால், ஒரு சவரன் நகையை தருவார் என கூறுவாராம்.
மூதாட்டி
மேலும் ஏற்கெனவே நீங்கள் நகை அணிந்திருப்பதால் இருக்கப்பட்டவர்கள் என நினைத்துக் கொண்டு கொடுக்க மாட்டார்கள். அதனால் என்னிடம் கழற்றி கொடுங்கள். நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என கூறி வாங்கிவிட்டு அந்த மூதாட்டிகளையும் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு செல்வாராம்.
தந்திரக்கார திருமலை
இது போன்ற இரு முறைகளில் மூதாட்டிகளை குறி வைத்து ஏமாற்றி வந்துள்ளார். இவர் மீது 25 க்கும் மேற்பட்ட நகை பறிப்பு வழக்குகள் இருக்கின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு அமைந்தரையில் ஒரு மூதாட்டியை ஏமாற்றி நகை பறிக்கும் போது சுதாரித்துக் கொண்ட மூதாட்டி தப்பியோட முயன்றார். அவரை திருமலை தாக்கிவிட்டு நகை பறித்து சென்றார்.
சிறையிலிருந்து வெளியே வந்த திருமலை
இந்த வழக்கில் சிறைக்கு சென்ற அவர் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதிதான் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த அவர் மீண்டும் நகைப்பறிப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் தற்போது வரை 15 நகை திருட்டு சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார். அதாவது 27 நாட்களில் 15 நகை திருட்டுகளில் ஈடுபட்டு அந்த நகைகளை டி பி சத்திரத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் கொடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.