ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி.. ஸ்டான்லி மருத்துவமனையில் பதற்றம்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருமலை இன்று திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூந்தமல்லி கிளை சிறையில் இருந்த திருமலை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் நடமாட்டம் தொடர்பான தகவல்களை கொலை கும்பலுக்கு கொடுத்தவர் ஆட்டோ ஓட்டுநரான திருமலை எனக் கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

கைதானவர்கள்: ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் திருவேங்கடம் என்ற ரௌடி, ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் பலரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிலர் அவ்வப்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
திருமலைக்கு நெஞ்சு வலி: இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் பூந்தமல்லி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சை: எனினும் அவருக்கு நெஞ்சு வலி அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பூந்தமல்லி கிளை சிறையில் இருந்த திருமலை தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நோட்டம் பார்த்து தகவல் கொடுத்தவர்: ஆம்ஸ்ட்ராங் எந்த நேரத்தில் எங்கு செல்வார்? பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் அவரது வீட்டுக்கு எந்த நேரத்தில் வருவார், எந்த நேரத்தில் அவருடன் ஆட்கள் அதிகம் இருக்க மாட்டார்கள், எப்போது துப்பாக்கி இல்லாமல் வருவார் என ஆம்ஸ்ட்ராங்கின் நடமாட்டம் தொடர்பான தகவல்களை கொலை கும்பலுக்கு கொடுத்தவர் தான் ஆட்டோ ஓட்டுநரான திருமலை எனக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டதாக பிரபல ரவுடி சம்போ செந்தில் மீது போலீசார் சந்தேகப்படுகின்றனர். சம்போ செந்தில், வெளிநாடு தப்பிச் சென்று உள்ளதாக கூறப்படும் நிலையில், சென்னை போலீசார் மத்திய அரசு உதவியை நாடி, இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications