"அடி.. பஸ்ஸை கொளுத்து"ன்னு கத்து தருவது அவங்கதான்.. எந்த கொம்பனும் பிறக்கவில்லை.. திருமா ஆவேசம்
திருமாவளவன் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்
சென்னை: "பணத்தை என் மயிருக்கு சமமாக கருதுபவன் நான்.. பணத்துக்காக விலை போகிறவன் நான் அல்ல. பணத்துக்காக யாரிடம் பல் இளித்துக் கொண்டு யாரிடம் நிற்கமாட்டேன்.. திருமாவளவனை விலைபேச எந்த கொம்பனும் இன்னும் பிறக்கவில்லை'என்று திருமாவளவன் பிரச்சாரத்தில் சீறியுள்ளார்.
தேர்தல் நெருங்குகிறது.. தலைவர்கள், தங்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.. இதுவரை வெளிவந்த தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின்படி, திமுக கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது..
தமிழக தேர்தல் திருவிழா.. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது.. மக்கள் மனங்களை வெல்லப் போவது யார்?
எனினும் ஸ்டாலினும் சரி, கூட்டணி கட்சி தலைவர்களும் சரி, தங்கள் பிரச்சாரத்தில் மும்முரத்தை காட்டி வருகின்றனர். அதிலும் திருமாவளவனின் பேச்சு அனல் தெறிக்கிறது. பாஜகவை குறி வைத்து திருமா பேசும் பேச்சுக்கு கூட்டம் திரண்டு வருகின்றது.. குறிப்பாக இந்த 2 நாட்களில் திருமா பேசிய பேச்சுக்கள் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதன் ஒரு குட்டி தொகுப்புதான் இது:
பினாமி
"அதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் தோள்களில் ஏறிக் கொண்டு பாஜக தமிழகத்தில் நுழைய பார்க்கிறது. பாஜகவின் பினாமியாக பாமக தலைவர் ராமதாஸ் இருக்கிறார்.. ராமதாஸ் நீர்த்து போய்விட்டார். சமூக நீதியின் காவலராக வேல்முருகன் உருவாகிறார். அவருக்குத்தான் இனி எதிர்காலம்.. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிற சிந்தனைவாதிகள் போல, பாஜகவிலோ, பாமகவிலோ ஒருத்தரை ஒருவரை காட்ட முடியுமா?
ரவுடிகள்
ஆனால் விசிகவை பார்த்து வன்முறையாளர்கள் என்று சொல்றாங்களே.. பாஜகவிலும்தான் வன்முறையாளர்கள் இருக்கிறார்கள்.. பாமகவிலும்தான் இருக்கிறார்கள்.. விசிகவினரை போகிற போக்கில் சிலர் ரவுடிகள் என்று விமர்சிக்கிறார்கள்.. அப்படி சொல்பவர்கள் கருத்தியல் ரீதியாக மேடைக்கு வந்து எங்களுடன் மோதி பார்க்க தயாரா?
விசிக
விசிகவா, பாஜகவா என்று மோதி பார்த்து விடலாமா? வா மேடைக்கு வா.. வா மேடைக்க.. தோழர் ரவிக்குமார், சிந்தனை செல்வன் போன்ற அறிவார்ந்தவர்களை பாஜகவில் காண்பிக்க முடியுமா? பாஜகவும், பாமகவும்தான் உண்மையில் ரவுடிகளின் கூடாரம்... அவர்கள்தான் வன்முறையை தூண்டுபவர்கள்... மறைந்திருந்து கல்லால் அடி.. காப்பக் காட்டில் இருந்து ஒளிந்திருந்துபஸ்லை கொளுத்து என்று கற்று தருபவர்கள் அவங்கதான்.. கட்ட பஞ்சாயத்து செய்வதும் அவங்கதான்..
கொம்பன்
பணத்தை என் மயிருக்கு சமமாக கருதுபவன் நான்.. பணத்துக்காக விலை போகிறவன் நான் அல்ல. பணத்துக்காக யாரிடம் பல் இளித்துக் கொண்டு யாரிடம் நிற்கமாட்டேன்.. திருமாவளவனை விலைபேச எந்த கொம்பனும் இன்னும் பிறக்கவில்லை' என்றார்.