ராஜகண்ணப்பனின் சர்ச்சை பேச்சு.. முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற திருமாவளவன்! முக்கிய கோரிக்கை
திருவள்ளூர்: சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருந்தது சலசலப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இன்று திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுகவும் பாஜகவும் இணைந்து கூட்டணி அமைந்ததாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்த கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் அதிமுக தலைவர்கள், குறிப்பாக மதிப்பிற்குரிய மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான் விளக்கத்தை அல்லது தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பாஜக தலைமையில் கூட்டணியா? அதிமுக தலைமையில் கூட்டணியா? என்கிற கேள்வியும் எழுகிறது.

அறிவிக்க வேண்டியவர் யார்? அவர் உள்துறை அமைச்சராக இருக்கலாம்.. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கலாம்.. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு உருவாகி இருக்கிற இந்த கூட்டணியை தலைமை வகித்து வழி நடத்துவது எடப்பாடி பழனிச்சாமியா அல்லது திரு அமித்ஷா அவர்களா? என்கிற கேள்வி எழுகிறது.
இதற்கெல்லாம் அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அல்லது விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வளவு அவசரமா இந்த கூட்டணியை உருவாக்கி இருக்க மாட்டாங்க.. என்ன அழுத்தமோ? என்ன காரணமோ! மிகவும் முன்கூட்டியே கூட்டணியை அறிவிக்கும் நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கிறது" என்று பேசினார்.
இதனை தொடர்ந்து, சிறுத்தை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த குழந்தையை இழந்த பெற்றோருக்கு அந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
அமைச்சர் எந்த பின்னணியில் இந்த கருத்தை சொன்னார் என்று தெரியவில்லை. வழக்கமாக நடக்கிறது என்றாலும் கூட, அவ்வாறு நடைபெறாமல் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு, குறிப்பாக அமைச்சருக்கு இருக்கிறது. ஆகவே இனி வருங்காலங்களில் அது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையிலே வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதும், அதன் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாப்பதும் மிக மிக இன்றியமையாதது. முதலமைச்சர் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.
முன்னதாக வால்பாறையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர், "மனிதர்களை யானை உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான். அரசு தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்" என்று பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications