துணிச்சல் இருந்தால் குஜராத்தில் இதை சொல்வீர்களா? அமித்ஷாவுக்கு திருமாவளவன் பகிரங்க சவால்!
சென்னை: அலுவல் மொழிக்கான பாராளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து அமித் ஷா விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
மேலும் அமித்ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்று அங்கு இந்தியைப் பயிற்று மொழி ஆக்குவோம் என்று பேசத் தயாரா என வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அலுவல் மொழி
''உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான 'அலுவல் மொழிக்கான பாராளுமன்ற குழு' அண்மையில், குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கையின் விவரங்கள் ஊடகங்களுக்குத் தெரிய வந்து இந்தி பேசாத மாநில மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே அறிக்கையின் விவரம் ஊடகங்களுக்கு வெளியானது பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பானதாகும். ''

பதவி விலக வேண்டும்
''எனவே அந்த அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும்; அத்துடன், அக்குழுவின் தலைவர் பொறுப்பு வகிக்கும் அமித் ஷா தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும். விதிவிலக்காக சில நேரங்களில் அதை முன்னதாகவே அரசிடம் அளிக்கலாம். ஆனால் பாராளுமன்றத்தில் அறிக்கை வைக்கப்படும் வரை அது ரகசியமாக இருக்க வேண்டும் என்பது விதி.''

தமிழக எம்.பி.க்கள்
''இந்தியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் யாரும் இடம்பெறுவதில்லை. இப்போதும்கூட பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக உள்ளனர். பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு எல்லா நிலைகளிலும் இந்தியைத் திணிப்பதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தின் இடத்தை இந்தியைக் கொண்டு பதிலீடு செய்வது என்று திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ''

அமித் ஷாவுக்கு கேள்வி
''மாநில மொழிகளின் உரிமைகளை மறுத்து அவற்றை அழிக்கப் பார்க்கிறார்கள். இத்தகைய இந்தி ஏகாதிபத்திய அணுகுமுறையின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்று 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் குஜராத்தில் இந்தியைப் பயிற்று மொழி ஆக்குவோம்' என்று பேசத் தயாரா? அப்படி அவர் பேசி குஜராத்தில் வாக்கு கேட்க முடியுமா?''












Click it and Unblock the Notifications