Thirumavalavan: அதிமுகவும் திமுகவும் என்னை முதல்வராக்க முயற்சித்ததா? மறுத்த திருமாவளவன்
சென்னை: அதிமுகவும் திமுகவும் இணைந்து என்னை முதல்வராக்க முயற்சித்ததை நான் உறுதிப்படுத்தியதாக வெளியான செய்தியை திருமாவளவன் மறுத்துள்ளார். மேலும் தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அவர் மறுத்துள்ளார்.
அதிமுகவும் திமுகவும் இணைந்து என்னை முதல்வராக்க முயற்சித்ததாக எனக்கு ஒரு தகவல் கிடைத்தது என்றுதான் சொன்னேனே தவிர, அதை ஊர்ஜிதப்படுத்தி நான் பேட்டியில் சொல்லவில்லை என்றும் திருமா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ' அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதிலளித்தேன்.
எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். 'திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.
நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான். அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.
தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும். இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.
எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையிறுத்தேன். அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு' ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவில் 59 எம்எல்ஏக்களும், அதிமுகவில் 46 எம்எல்ஏக்களும் வென்றுள்ளார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்தது. இதனால் அக்கட்சிக்கு 112 கிடைத்தது. ஆனால் பெரும்பான்மைக்கு 6 தேவைப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் கேட்டிருந்தார்.
இதில் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டன. கம்யூனிஸ்டுகளின் முடிவுதான் எனது முடிவும் என திருமாவளவன் சொல்லியிருந்த நிலையில் இரவு வரை தொண்டர்களுடன் ஆலோசனையில் இருந்தார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுடனும் அவர் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. மறு நாள் 9 ஆம் தேதி காலை தவெகவுக்கான ஆதரவு கடிதம் கொடுக்கப்படும் என அவரது கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரித்த போது திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் விஜய் முதல்வராவதை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் 9ஆம் தேதி மாலை தவெகவுக்கு விசிக ஆதரவு என செய்தி வெளியானது. ஆதரவு கடிதத்தை திருமாவளவன், ஆதவ்விடம் கொடுத்தனுப்பினார். இவ்வாறு ஆதரவு கடிதம் கொடுக்கும் நிலையில் அதை காலையிலேயே கொடுக்காமல் எதற்காக இத்தனை தாமதம் என்ற கேள்வி எழுந்தது.
இந்த தாமதத்தை வைத்து திருமாவளவனை முதல்வராக்க பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து பின்னர் நீர்த்து போனதால்தான் திருமாவளவன் கடிதத்தை தாமதமாக கொடுத்தார் என்று கடந்த இரு நாட்களாக உறுதி செய்யப்படாத செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் நிபுணர் எழுப்பிய கேள்விக்கு தான் அளித்த பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு திரித்து போடப்பட்டுவிட்டது என திருமாவளவன் பரபரப்பு மறுப்பை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications