பாஜக கனவில் மண்ணை அள்ளி போடுவோம்! இந்தியா கூட்டணியை பார்த்து மோடிக்கு நடுக்கம்! சீறிய திருமாவளவன்!
சென்னை: 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளதால் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நடுக்கம் வந்துவிட்டதாக விமர்சித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
மேலும், பெங்களூரில் நடந்த கூட்டம் பிரதமர் மோடியின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக அவர் விமர்சித்தார். எதிர்க்கட்சிகள் எங்கே ஒன்றுக் கூடப் போகிறார்கள் என பாஜக எண்ணியதாகவும் ஆனால் அவர்களின் நினைப்புக்கு மாறாக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றுக்கூடி 'இந்தியா' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி ஒரு பக்கம் போவார், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பக்கம் போவார், ராகுலை அவர்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்கமாட்டார்கள் என பாஜக கனவு கண்டு வந்ததாகவும், ஆனால் அந்த கனவிலே மண்ணை அள்ளி போடும் விதமாக 26 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்களே என்பதை பாஜகவால் தாங்கமுடியவில்லை என சாடியுள்ளார்.
பாஜக வெற்றிபெற்றால் மோடி பிரதமர், இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் யார் பிரதமர் என்றும் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் நிச்சயம் குழப்பம் வரும் என பாஜக காத்திருந்ததாகவும் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பை தாம் பெற்றதாகவும் பாஜக கனவு ஒரு போதும் பலிக்காது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே திருமாவளவன் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே லேசான தூரல் விழுந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் பாஜகவுக்கு எதிரான தனது உள்ளக்குமுறலை கொட்டித்தீர்த்த பிறகே பேச்சை நிறைவு செய்தார். இயற்கை எப்போதுமே விசிகவுக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications